Monday, June 18, 2012

எதையும் மாத்தி யோசிங்க!மனஅழுத்தம் ஏற்படாது!!

எதையும் மாத்தி யோசிங்க!மனஅழுத்தம் (ஸ்டெரெஸ்) ஏற்படாது!!

எப்ப பார்த்தாலும் எதைப்பற்றியாவது எண்ணி கவலைப்படுவது. நடந்ததை நினைத்து கவலைப்படுவது ஒரு பக்கம் இருக்க நடக்கப்போவதை எண்ணி கவலைப் படுபவர்கள் பெரும்பாலோனோர் இருக்கின்றனர். இதன் காரணமாகவே மனஅழுத்தம் போன்றவைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. மனஅழுத்தம் அதிகமாக அதிகமாக அழையா விருந்தாளியாக எண்ணற்ற நோய்கள் உடலுக்குள் புகுந்து கொள்கின்றன. எனவே முதலில் மனஅழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்களையும் அவற்றை நீக்குவதற்கான வழிமுறைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

நேர்மறை எண்ணங்கள்

சிலர் எதற்கெடுத்தாலும் கவலைப்படுவார்கள். பள்ளிக்கு சென்ற பிள்ளை வரதாமதமானாலோ, கணவனோ மனைவியோ அலுவலகத்திலிருந்து வர தாமதமானாலோ கவலைப்பட ஆரம்பித்து விடுவார்கள். இந்த நிலையற்ற (restlessness) தன்மை ஒரு விதத்தில் இதயத்தை பாதிக்கும் என்கின்றனர் உளவியல் மருத்துவர்கள். மனைவியோ கணவனோ வர தாமதமானால், ஏதாவது விபத்து ஏற்பட்டிருக்குமா என்று கவலை கொள்ளாமல் அலுவலகத்தில் வேலை அதிகமாயிருந்திருக்கும் என்று நேர்மறையாக சிந்திக்க பழகுங்கள். பள்ளிக்கு செல்லும் குழந்தைகளிடம் ஏதாவது ஸ்பெசல் கிளாஸ் இருந்தால் நேரடியாக சொல்லச் சொல்லுங்கள்.

மாத்தி யோசி

ஒரு பிரச்சினை வந்தால் அதை நல்ல முறையில் எப்படி பார்ப்பது என்பது தான் மாத்தி யோசிப்பது. உதாரணமாக நாம் பயணிக்கும் காரில் டயர் பஞ்சராகிவிட்டால் காற்று போய்விட்டால், மாலையில் நடக்காமல் இப்போதே நடந்தது நல்லதற்கு தான் என்றோ, விபத்து ஏற்பட்டுவிட்டால் சேதம் இந்த அளவோடு போயிற்றே என்றும் யோசிக்க பழகுவது. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்றே என்று எண்ணுவது நன்மை தரும்.

ரெய்ன்ஹோல்ட் நியுபர் சொன்னதன் படி "என்னால் மாற்ற முடியாத மாற்றங்கள் ஏற்று கொள்ளும் பக்குவத்தையும், என்னால் மாற்றக்கூடியதை மாற்றும் சக்தியையும், இவை இரண்டுக்குமான வித்தியாசத்தையும் அறிந்து கொள்ள கூடிய அறிவையும் கொடு" என்று வாழக்கற்றுக்கொள்ளுங்கள். இதுபோன்ற சமயங்களில் பிடித்த பாட்லை பாடுவதோ அல்லது தெரிந்த தோத்திரப்பாடலை முனுமுனுப்பதோ கவலை அடையாமல் மனதை நிலை நிறுத்த உதவும்.

மாற்று வழி என்ன?

திடீரென ஏற்படும் மாற்றங்கள் அதிக மனச் சோர்வை தரும். குழந்தைகள் உள்ள வீட்டில் குழந்தைகள் மருத்துவர், அவசர உதவி எண்கள் போன்றவற்றை எழுதி வைத்திருப்பது அவசியமும் கூட. மிக பெரிய நிறுவனங்கள் கூட ஒரு புதிய பொருளை சந்தைக்கு கொண்டு வரும் முன் இது விற்பனை ஆகாவிட்டால் மாற்று வழி என்ன என்பதை யோசித்து வைத்திருப்பார்கள். எப்போதுமே மாற்று வழிகளும் இரண்டாவதாக செயல் படுத்த ஒரு வழியும் அறிந்து வைத்திருத்தல் முக்கியமாகும். அலுவலகத்திற்கு செல்வதற்கு வேறு வழி எதுவும் இருக்கிறதா என்றும் தெரிந்து வைத்திருப்பது அவசியம். அப்பொழுதுதான் ஏதாவது சிக்கல் என்றாலும் வேறு பாதையில் ஈசியாக செல்ல முடியும்.

மனதை ஒருமுகப்படுத்துங்கள்

ஒரு சுவாரசியம் இல்லாத கூட்டத்தில் அமர்ந்திருக்கும் போது அடுத்து முடிக்க வேண்டிய வேலைகள் உங்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்குமானால் நீங்கள் கட்டாயமாக கூட்டதில் கலந்து கொண்டே ஆக வேண்டும் எனும் போது செய்ய முடிவது ஒன்றும் இல்லை. எனினும் மனதளவில் ஒரு விடுமுறையை கொண்டாடுங்கள். நீங்கள் அதிகம் விரும்பிய ஒரு இடத்திற்கு கற்பனையில் பயணம் செய்து மகிழ்ச்சியடையலாம். இதுபோன்ற பயிற்சி தினசரி 15 முதல் 20 நிமிடங்கள் வரை செய்யலாம்.

கடிதம் எழுதுங்கள்

உங்களுக்கு அதிக கோபம் ஏற்படக்கூடிய நிகழ்வு ஏற்பட்டால் உடனே ஒரு காகிதம் எடுத்தோ அல்லது கணினியிலோ வேகமாக மனதில் தோன்றுவதை அப்படியே எழுதுங்கள். இதில் நீங்கள் பிழைகள் திருத்தவோ அதை நீக்க சிந்தித்தோ எழுத வேண்டாம். உங்களுக்கு கோபத்தை உண்டு பண்ணியவர் எதிரில் இருப்பின் எப்படி பேசுவீர்களோ, அல்லது சாலை பணியால் ஏற்படும் சங்கடங்கள், அலுவல் தாமதம் போன்றவற்றை அந்த அதிகாரியிடம் பேச சந்தர்ப்பம் வந்தால் என்ன சொல்வீர்கள் என்பதை அப்படியே எழுதுங்கள். வரைவதில் ஆர்வம் கொண்டவர் எனில் ஒரு வண்ண பென்சிலை எடுத்து தீட்டுங்கள். அதை படித்துப்பாருங்கள். மனதில் உள்ள அனைத்தும் கொட்டி எழுதி ஆகிவிட்டதென்றால் அதை போட்டு மூடிவிடுங்கள். இப்போது மனம் சற்றே தெளிவடைந்து விட்டதை உணர்வீர்கள். மற்ற பணியில் கவனம் செலுத்துங்கள். இது மனதில் ஏற்படும் புழுக்கத்தை மாற்றும். மன அழுத்தம் ஏற்படாது என்கின்றனர் நிபுணர்கள்.

No comments:

Post a Comment