Sunday, June 9, 2013

உணவு எவ்வாறு ஆற்றலாக மாற்றப்படுகின்றது என்பதை, அறிவியல் முறைப்படி பார்க்கலாம்.

இயற்கை சார்ந்த உணவு முறைகள்

தலைப்பிற்குள் செல்வதற்கு முன், உணவு எவ்வாறு ஆற்றலாக மாற்றப்படுகின்றது என்பதை, அறிவியல் முறைப்படி பார்க்கலாம்.

நாம் உண்ணும் உணவில் ஆறு முக்கிய ஊட்ட சத்துக்கள் ( Six Essential Nutrients ) உள்ளன. அவை ,

1. புரதங்கள் ( Proteins )
2. மாவுச்சத்து ( Carbohyrates )
3. கொழுப்பு ( Fats )
4. தாதுக்கள் ( Minerals )
5. உயிர் சத்துக்கள் ( Vitamins )
6. தண்ணீர் ( Water )

ஆகியன ஆகும்.

இதில் நம் உடலுக்கு ஆற்றலை கொடுப்பவை புரதங்கள், மாவுச்சத்து மற்றும் கொழுப்பு ஆகும்.எனவே இவை மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.

இவற்றுள் மாவுச்சத்து ( சர்க்கரை ) உடனடி ஆற்றலை அளிக்க வல்லது. புரதம் மெதுவான மற்றும் நீடித்த ஆற்றலை கொடுப்பது.கொழுப்பு அதிக ஆற்றலை வழங்குவது ஆகும்.

இப்பொழுது நாம் உண்ணும் உணவு, உணவுப்பாதையில் அடையும் மாற்றங்களை வரிசையாக காணலாம்.

• உணவானது, வாயில் உமிழ்நீருடன் நன்கு கலக்கப்பட்டு அரைக்கப்படுகின்றது.உமிழ்நீரில் உள்ள அமிலேஸ் ( AAmylase ) என்னும் நொதி ( Enzyme) உணவுத் துகள்களை ஒரளவு சிதைக்கின்றது.

• பின், உணவுக்குழல் வழியாக இரைப்பையை அடைகின்றது. அங்கு HCL அமிலம் மற்றும் பெப்சின் என்னும் என்சைம் சேர்க்கப்படுகின்றது.இவை உணவின் மீது வேதிமாற்றங்களை நிகழ்த்துகின்றன.மேலும் இரைப்பை தசைகளின் இயக்கங்களாலும் உணவு நன்கு அரைபடுகின்றது.

• அடுத்து உணவு கூழ்நிலையில், சிறுகுடலின் முன்பகுதியை ( duodenum ) அடைகின்றது.அங்கு பித்த நீர்,கணைய நீர் மற்றும் குடல் நீர் சேர்க்க்ப்பட்டு அடுத்தகட்ட வேதிமாற்றம் நிகழ்கின்றது.குடலின் தசை இயக்கங்கள் மூலமும் உணவு மேலும் அரைக்கப்படுகின்றது.

• இறுதியாக நன்கு சிதைக்கப்பட்ட உணவிலுள்ள ஊட்ட சத்துக்கள், உறிஞ்சப்பட்டு ரத்தத்தின் மூலம் கல்லீரலுக்கு எடுத்து செல்லப்படுகின்றன.அங்கு இச்சத்துக்கள் வடிகட்டப்பட்டு, நச்சு நீக்கப்பட்டு, மேலும் வேதிமாற்றங்கள் அடைகின்றன.

• பின் இச்சத்துக்கள் உடலின் பல்வேறு செல்களுக்கு ( Body cells ) எடுத்து செல்லப்படுகின்றன. அங்கு நடைபெறும் பல்வேறு தனி தனி வேதி மாற்றங்கள் மூலம் இவை, ATP ( Adenosine Triphosphate ) எனும் ஆற்றல் வடிவமாக மாற்றப்படுகின்றன.

• இந்த ஆற்றலே மனிதன் நகர்வதற்கும், உள்ளுறுப்புகள் செயல்படுவதற்கும்,புதிய செல்கள் உருவாக்கத்திற்கும் பயன்படுகின்றது.


மேலே பார்த்தவரையில் மூன்று நிகழ்வுகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.அவற்றை ஒவ்வொன்றாக பின்வருமாறு பார்ப்போம்,

1. சிதைவு வேதிமாற்றங்கள் ( Catabolism ) :

உணவுப்பாதையில், உணவுத்துகள்கள் பல்வேறு வேதிமாற்றங்களின் மூலம் மிக நுண்ணிய துகள்களாக சிதைக்கப்படுகின்றன.இவை சிதைவு வேதிமாற்றங்கள் ( Catabolism ) எனப்படுகின்றன.

இவற்றுள் குறிப்பாக செல்களில் நடக்கும் பல சிதைவு வேதிமாற்றங்கள் ( Catabolism ) மூலம், ஊட்டச்சத்துகள் முற்றிலும் சிதைக்கப்பட்டு ஆற்றல் பெறப்படுகின்றது. இதில் ஆக்ஸிஜன் பயன்படுத்தப்பட்டு , கார்பன் டை ஆக்சைடு கழிவாக வெளியேற்றப்படுகின்றது.தனித்தனியாக நடைபெறும் இந்த வினைகளை மொத்தமாக பார்க்கும்போது, எரி அறையில் ( Combustion Chamber ) உணவை எரிப்பது போல தோன்றுகின்றது.எனவே இது கலோரியை எரித்தல் ( Calorie Burning ) எனப்படுகின்றது.

2. வளர்ச்சி வேதிமாற்றங்கள் ( Anabolism ) :

புதிய செல்களை உருவாக்கும் வேதிமாற்றங்கள், வளர்ச்சி வேதிமாற்றங்கள் ( Anabolism ) எனப்படுகின்றன.

முற்றிலும் சிதைக்கப்படாத ஊட்டச்சத்துக்கள் மற்றும் ATP ( Adenosine Triphosphate ) வடிவிலான ஆற்றலை பயன்படுத்தி இவ்வேதிமாற்றங்கள் நிகழ்கின்றன.


3. வளர்சிதை வேதிமாற்றங்கள் ( Metabolism ) :

வளர்ச்சி மற்றும் சிதைவு வேதிமாற்றங்களின் தொகுப்பே, வளர்சிதை வேதிமாற்றங்கள் ( Metabolism ) எனப்படுகின்றன.

மனித உடலின் ஒவ்வொரு செல்களிலும் நடைபெறும் இவ்வினைகள், உயிர் வாழ்வதற்கு மிகவும் இன்றியமையாதவை ஆகும்.நமது ஒவ்வொரு செயல்களும் இவற்றுடன் தொடர்புடையனவாகும்.

ஒவ்வொரு செல்களிலும் நடைபெறும் இவ்வினைகளை மொத்தமாக தொகுத்து பார்த்தால்,பல கோடிக்கணக்கான வேதிமாற்றங்கள், நமது உடலில் தினமும் நடப்பதை அறியலாம்.( ப்ப்ப்ப்ப்ப்ப்பா, என்ன ஒரு அதிசயமான படைப்பு நமது உடல் !!!!!. )

இதனால் Metabolism என்பது உடலின் ஆரோக்கியத்தை குறிக்கும் அளவீடாக பார்க்கப்படுகின்றது.

சரி, இப்பொழுது கட்டுரையின் தலைப்பிற்குள் செல்வோம்.

இனி, இயற்கை சார்ந்த உணவு முறைகளையும், அவை எவ்வாறு நம் உடலின் Metabolism மேம்பட உதவுகின்றன என்பதையும் பார்க்கலாம்.

இயற்கை சார்ந்த உணவு முறைகள் :

1. உணவின் குணமறிந்து உண்ணல் :

வாதம், பித்தம், கபம் என்னும் மூன்று குணங்களில் ஏதேனும் ஒரு குணத்தை,ஒவ்வொரு உணவுப் பொருளும் பெற்றிருக்கும்.இந்த மூன்று குணங்களும் நமது உடலில் சமநிலையில் இருக்குமாறு, நாம் நமது உணவு முறையை அமைத்து கொள்ள வேண்டும்.

2. காலமறிந்து உண்ணல் :

தினசரி, நமது உடலில் ஒவ்வொரு வேளையும்,ஒரு குணம் மேலோங்கி இருக்கும்.இதனை பின்வருமாறு காணலாம்.

• கபம், அதிகாலையில் தொடங்கி சிறிது சிறிதாக அதிகரித்து நண்பகலில் உச்சத்தை அடையும்.

• பித்தம், நண்பகலுக்கு பிறகு சிறிது சிறிதாக அதிகரித்து மாலையில் உச்சத்தை அடையும்.

• வாதம், இரவில் சிறிது சிறிதாக அதிகரித்து அதிகாலையில் உச்சத்தை அடையும்.

இவ்வாறு அதிகரிக்கும் குணங்களை சமன்படுத்தவே ,

“ காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் “ – என்ற பாடல் வழி கூறுகின்றது.

இதில் இஞ்சி வாயுவைக் ( வாதம் ) குறைக்கும்; சுக்கு கபத்தை குறைக்கும்; கடுக்காய் பித்தத்தை குறைக்கும்.

இது தவிர வயதிற்கேற்ப மனித உடலில், இக்குணங்கள் பொதுவாக பின்வருமாறு அமைகின்றன. சிறுவயதில் கபம் மேலோங்கி இருக்கும்; நடுவயதில் பித்தம் அதிகமாக இருக்கும்;முதுமையில் வாதம் அதிகமாக இருக்கும்.

இதனை ஒட்டியே சிறு வயதில் குழந்தைகள் அடிக்கடி சளி தொல்லையாலும், நடு வயதினர் பித்தம் தொடர்புடைய நோய்களாலும்,மூத்த வயதினர் வாத நோய்களாலும் பொதுவாக அவதிப்படுவதைக் காணலாம்.

எனவே இவற்றுக்கு ஏற்ப நமது உணவு முறையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

3. பசித்து புசித்தல் :

“துய்க்க துவர பசித்து ”- என்கின்றார் வள்ளுவர் ( குறள் எண் 944 ).எனவே நன்கு பசித்தபின் உண்ண வேண்டும்.இதுவே முன்னர் உண்ட உணவு நன்கு செரித்ததற்கான அறிகுறி ஆகும்.

மேலும் முன் சென்ற உணவு நன்கு செரித்த பின் உண்டால், உடலுக்கு மருந்தே வேண்டாம் என்கிறார் ( குறள் எண் 942 ).

4. செரிக்கும் அளவறிந்து உண்ணல் :

நமது உடலின் செறிக்கும் அளவறிந்து உண்ண வேண்டும்.இவ்வாறு உண்டால் நீண்ட நாள் வாழலாம் என்கிறார் வள்ளுவர் ( குறள் எண் 943 ).

மேலும் சரியான உணவை அளவோடு உண்டால் உடலுக்கு தீங்கில்லை என்கிறார் ( குறள் எண் 945 ).

5. நொறுங்கத் தின்றல் :

உணவை சிறிது சிறிதாக உமிழ்நீருடன் கலந்து, அதனை நன்கு மென்று பிறகு விழுங்க வேண்டும்.இதனையே நொறுங்கத் தின்றால் நூறு வயது என்றனர் நம் முன்னோர்கள்.வாயில் ஜீரணம் நடைபெறுவதை அன்றே உணர்ந்துள்ளனர்.

6. சரியான உணவு வகைகள் :

காய்கறிகள், பழங்கள், கீரைகள், சிறுதானியங்கள் போன்றவற்றை நம் முன்னோர்கள் உண்டு நீண்ட காலம் உடல் நலத்தோடு வாழ்ந்தனர்.இவற்றையே ஊட்டச்சத்து மதிப்பு ( Nutritional Value ) மிக்க உணவுகளாக அறிவியல் உலகம் அங்கீகரிக்கின்றது.ஆனால் இன்றைய குழந்தைகள் இவற்றை தொட்டுக் கூட பார்ப்பதில்லை என்பது வருத்தமான விஷயம்.

மேலும் நம் முன்னோர்கள் இயற்கை உரம் மற்றும் பூச்சி விரட்டிகளை ( கவனிக்கவும், பூச்சி கொல்லி அல்ல ) பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட இயற்கை உணவுகளையே ( Organic foods ) உண்டு நோயின்றி, நீண்ட நாட்கள் வாழ்ந்தனர்.

ஆனால் இன்று பெரும்பாலும் வேதியியல் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட உணவுகளையே உண்டு வருகின்றோம்.இவை நம் உடலில் அன்றாடம் நடக்கும் பல கோடிகணக்கான Metabolism வேதிமாற்றங்களை நேரடியாக பாதிக்கின்றன.இதனால் பல்வேறு கொடிய நோய்களுக்கு ஆளாகி வருகின்றோம்.

மேற்சொன்ன ஆறும், இயற்கை சார்ந்த உணவு முறைகள் ஆகும்.இவற்றை கடைபிடிப்பதன் மூலம் நம் உடலின் Metabolism வேதிமாற்றங்கள் சிறப்பாக நடைபெறும்; நாம் பல நோய்களிலிருந்து விடுதலை பெறலாம்; நல்ல ஆரோக்கியத்தை பெறலாம்.மேலும் குழந்தைகளின் உடல் நலத்தையும் உறுதி செய்யலாம்.

சரி, இதற்கெல்லாம் என்ன ஆதாரம் ?.

மேற்சொன்னவற்றுள் சிலவற்றை அறிவியல் உலகம் கிட்டதட்ட ஏற்றுக்கொண்டுள்ளது.பிறவற்றுக்கு இதனை கடைபிடித்து பயனடைந்த நம் முன்னோர்களே சான்று. மேலும் இன்று, இதனை பகுதியளவாவது கடைபிடித்து பயன் பெற்றுவரும் சில சமகால மனிதர்களே இதற்கு கூடுதல் சாட்சி ஆகும்.

ஆனால், பரபரப்பான இன்றைய வாழ்வில் இதெல்லாம் சாத்தியமா ?. வேறு வழியில்லை.சிறிது சிறிதாகவாவது முயல வேண்டும். ஏனென்றால் இன்றைய குழந்தைகளின் உணவுப்பழக்கம் Artificially Flavoured foods and drinks, processed foods என்று மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது.இது தவிர்க்கப்பட வேண்டும்.மக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்து,பரவலாக ஒத்த கருத்துடைய மனநிலை ஏற்படும்போது இதன் சாத்தியக்கூறுகள் அதிகரிக்கும். 

Friday, May 17, 2013

நடராஜருடைய கூத்தில் பொதிந்துகிடக்கும் தத்துவங்கள்



நடராஜர் நடனமாடத் தொடங்குமுன் 14 முறை தன் கையிலுள்ள ‘டக்கா’ எனப்படும் உடுக்கையை ஒலிக்கிறார். அதனின்றும் வெவ்வேறு சப்தங்கள் எழுகின்றன. அவருடைய ஆட்டத்தைக் காணக் குழுமியிருக்கும் தேவர்கள், முனிவர்கள் ஆகியோரிடையே இருந்த பரதமுனி, நாரதமுனி, பாணினிமுனி, பதஞ்சலிமுனி, முதலானோருக்கு வெவ்வேறு வகையாக இந்த சப்தங்கள் ஒலிக்கின்றன; பொருளாகின்றன.

*பரதமுனிக்கு அவை நாட்டியசாஸ்திர சூத்ரங்களாகவும்
*நாரதமுனிக்கு சங்கீதசாஸ்திர சூத்ரங்களாகவும்
*பாணினிமுனிக்கு வியாகரணசாஸ்திர சூத்ரங்களாகவும்
*பதஞ்சலிமுனிக்கு யோக சாஸ்திர சூத்ரங்களாகவும் அவை ஒலிக்கின்றன.

அவரவர் துறையில் அவரவர் சிறப்பான நூல்களை உலகம் உய்ய அளிக்க அவை வழிசெய்கின்றன.

*பிரபஞ்ச இயக்கமே சிவதாண்டவம்*

அதனால்தான் சிவனின் நடனத்தை ஸ்ரீசக்ர பிந்துவில் நடைபெறும் நடனமெனக் கூறுவர். அவருடைய நடனத்தாலேயே பிரபஞ்சம் இயங்குகிறது. அவரைச் சுற்றி அனைத்தும் இயங்குகின்றன. பரதமுனிக்கு உடுக்கையின் ஒலியினால் விளக்கியது தவிர தனது நடன முத்திரைகளாலும், கரணங்களாலும், அவற்றின் சேர்க்கையான அங்கஹாரங்களாலும் நடனக் கலையின் சூக்ஷ்மங்களை நடராஜப் பெருமான் விளக்குகிறார். இதனை அடிப்படையாகக் கொண்டே தன் நூலில் நூற்றியெட்டு கரணங்களை பரதர் விளக்குகிறார். தஞ்சை பிரஹதீஸ்வரர் ஆலயப் பிராகாரத்திற்கு மேல் உள்ள கோபுர உள்சுற்றில் இந்த நூற்றியெட்டுக் கரணங்களையும் செதுக்கியுள்ள சிற்பி இறுதியில் ஒரு பிறையினை அதிகப்படியாக ஏதும் செதுக்காது விட்டுச் சென்றிருக்கிறார், இது வருங்காலத் தலைமுறைகளுக்கு அந்தச் சிற்பி விடுத்துள்ள சவால். ‘பரதமுனி கூறிய நூற்றியெட்டு கரணங்களையும் இங்கு நான் செதுக்கியுள்ளேன். இது தவிர வேறு ஏதாவது காரணம் உனக்குத் தெரிந்தால் இங்கு செதுக்கிவிடு’ என. இதுநாள் வரை அந்தப் பிறை ஏதும் செதுக்காது தான் வெற்றாக, நடனக் கலையின் முழுமைக் கொரு வெற்றிச் சான்றாக இருந்து வருகிறது.

உலகில் ஒருவர் அடையத்தகுந்த பேறுகளிலெல்லாம் மிகச் சிறந்த பெரும் பேறாகிய பெருவீட்டை, நாதனுடன் ஒன்றும் யோக நெறியை அறிந்த யோகிகள் அகக்கண்ணினால் காண, ஈசன் அந்த நடனத்தை, மக்களின் அறியாமை எனும் முயலகனை காலின் கீழ் அழுத்தி, ஆயிரம் தலைகள், ஆயிரம் கால்கள், ஆயிரம் கைகள், சடைமுடியுடைய ஆயிரம் உருவங்களுடன் மூவாசைகளை அழிக்கும் மூன்று முனைகளை உடைய சூலமேந்தி, பல்வேறு ஆயுதங்களைக் கைகளிலேந்தி வாயுவைத் தன் நடன வேகத்தினாலியக்கி, சந்திர, சூர்ய, அக்னிகளை தன் முக்கண்ணாக்கி, கோபமெனும் புலியையும், மதம் (கர்வம்) எனும் யானையையும் அடக்கித் தோலுரித்து, ஆடையாயுடுத்தி, வெவ்வேறு தீயசக்திகளெனும் விஷப் பாம்புகளை அணிகலன்களாக்கி கோடி சூர்யப் பிரகாசத்தோடு ஹிரண்ய கர்ப்ப முட்டையில் உள்ளும், புறமுமாக நின்று வேதங்களென்னும் காற்சிலம்புகள் ஒலிக்க ஆடுகின்றார்.

அணுவிற்கணுவாய், அசையாப் பொருளாய் தங்கள் ஆன்மாவில் விளங்கும் ஈசனை, பிரபஞ்ச மூலகாரணராய், பிரபஞ்ச சுழற்சிக்குக் காரணராய் உள்ள மஹேசரை, புனித பிரஹ்மக் கருவான தங்கக் கருவாய்த் தங்கியுள்ளவரை, அதையடக்கிய ஹிரண்ய கர்ப்பமாகிய பொன் முட்டையுள் ஆடுவதை யோகிகள் காண்கின்றனர். இந்த ஹிரண்ய கர்ப்பமே பொன்னம்பலமென வழங்கப்படுகிறது. இந்த நடனத்தை கூர்ம புராணம் வர்ணிக்கிறது.

தாருகா வனத்தில் வேதங்களில் சிறந்து விளங்கி, அதனாலேயே செருக்கடைந்த முனிவர்களை செருக்கடக்கி உய்விக்க வந்த ஈசன் சுந்தரனாய், விஷ்ணுவை மோஹினியாக்கி, எழுந்தருளினார். முனிவர்களின் மனங்கள் மோஹினியின் எழிலுருவில் மயங்கின; முனிபத்னியர் சுந்தரரின் எழிலில் தம்மை இழந்தனர். சில கண நேரம் மதிமயக்கிய முனிவர்கள் புலனடக்கத்தை உடையவர்களாக வாழ்ந்திருந்த காரணத்தால் தங்கள் மதிமயங்கிய சுந்தரரையும், மோஹினியையும் எவரென அறியாது அழிக்க முற்பட்டனர். அவர்களின் மாயையினை விலக்க, அவர்களால் ஏவப்பட்ட கோபத்தின் உருவான புலியையும், மதத்தின் உருவான யானையையும் தோலுரித்து உடுத்திக்கொண்டு விட்டார் சுந்தரர். தீயசக்திகளாகிய பாம்புகளையும் தன் அணிகளாக்கிக்கொண்டார். இறுதியில் அவர்களிடம் எஞ்சியிருப்பது வேதங்கள்தான். அவற்றை அவர்கள் ஏவ அவற்றையும் தனது காற்சிலம்புகளாக்கி பிட்சாடனராக, கஜசம்ஹார மூர்த்தியாக, நடனமிட்டார், அவர்களுடைய மடமை அல்லது அஞ்ஞானமெனும் முயலகனை காலின் கீழிருத்தி. இந்த நடனத்தை நினைத்து பின்னொரு சமயம் விஷ்ணு மெய்சிலிர்க்க அதனைத் தானும் காண விழைந்த ஆதிசேஷன் பதஞ்சலி முனிவராகி தில்லையில் ஈசனின் நடனத்தைக் கண்டு களித்தார்.

பிரபஞ்சத்தின் சுழற்சிக்கு மைய இயக்கமாகத் திகழும் இந்த ஆட்டத்தில் சிவசக்தி ஐக்யத்துக்கு முக்கியத்துவமளிக்கும் வகையில் சிவனது தாண்டவத்துடன் சக்தியின் லாஸ்யத்தையும் நாம் காண்கிறோம்.

ஈசனின் நடனத்தில் தான் எத்தனை வகை?
எத்தனை விதமாக தன் நடனத்தை எத்தனை பேர்க்கு அருளச் செய்கிறார் மஹேசர்?
அவற்றில் தாண்டவத்தில் தான் எத்தனை விதம்?

தாண்டவ - யோக நடனம்

ஒரு பெண்ணால் மட்டுமே தான் கொல்லப்பட வேண்டுமென வரம் பெற்ற தாருகாட்சன் என்ற அரக்கனிடமிருந்து தேவர்களைக் காக்க உமையுடன் கூடிய ஈசன், தன் மூன்றாவது கண்ணிலிருந்து நீலகண்டமுள்ள காளியைப் படைத்தார். அரக்கனை அழித்த பின்னரும், அவனது உதிரம் குடித்ததனால், உக்கிரம் தணியாத காளியின் உக்கிரத்தை அடக்க ஈசன் ஒரு குழந்தையாக மாறி காளியின் மார்பிலிருந்து பாலாக அவளது உக்கிரத்தை உறிஞ்சிவிட்டார். பிறகு காளியை மகிழ்விக்க பூதகணங்களுடன் தாண்டவமாடினார். இந்தத் தாண்டவத்தினை தேவர்களும், முனிவர்களும் யோக சக்தியினால் கண்டார். இது லிங்கபுராணத்தில் வர்ணிக்கப் படுகிறது.

ஊர்த்துவ தாண்டவம்

சும்பன், நிசும்பன் எனும் அரக்கர்களை அழிக்கும் காளி உக்கிர நடனம் புரிந்தாள். அவளை அடக்க இறைவனும் அவளுடன் நடனம் புரிந்தாள். ஒரு நிலையில் இறைவன் தன் காதினின்றும் கழன்று விழுந்த குண்டலத்தினை சுழன்றாடியபடியே காலினால் லாகவமாக எடுத்து ஊர்த்துவ தாண்டவ நிலையில் பழையபடி காதில் அணிந்த நிலையில், பெண்மை காளியை காலைத் தூக்க இயலாது தலைகுனியச் செய்தது. இது திருவாலங்காட்டில் நடந்தது. இதைக் காண ஆனந்த முனிவரும், கார்க்கோடகன் எனும் பாம்பரசனும் தவமியற்றிக் கண்டனர். யோக நிலையில் பிராணாயாமத்தால் மூச்சை ஊர்த்துவ நிலைக்கு கொண்டு செல்வதையே இந்த யோக நடனம் குறிக்கிறது என்பர்.

சந்தியா தாண்டவம்

சிவபெருமான் சமுத்திர மந்தனம் எனப்படும் பாற்கடலைக் கடைந்தபோது முதலில் வெளிவந்த ஆலகால விஷத்தினை புவனங்களைக் காக்க வேண்டி, தன் கண்டத்தே நிறுத்தி அருளி நீலகண்டராகி தேவர்களால் அர்ச்சிக்கப்பட்டார். ஓர் ஏகாதசியன்று. இதையடுத்து திரயோதசியன்று மாலை சந்தியாகாலத்தில் ஒரு யாமப் பொழுது கையில் சூலமேந்தி உமையவள் காண நந்தியின் இரு கொம்பினுக்கிடையே நின்று தாண்டவ நடனம் புரிந்தார். இதை பிரதோஷ நடனம் என்பர். ஆகமத் திரட்டும், சோமதேவரின் கதாசரித் ஸாகரமும் இதை வர்ணிக்கின்றன. வைரங்களால் இழைக்கப்பெற்ற பொன் சிம்மாசனத்தில் ஜகன்மாதாவை இருத்தி கயிலாயத்தின் உச்சியில் ஈசன் சூலபாணியாக ஆடினான். தேவர்கள் நன்றிகூறி சூழ்ந்து நின்றனர். வாணி வீணை இசைத்தான். இந்திரன் குழலூதுகின்றான். திருமகள் பாடுகிறாள். திருமால் மத்தளம் இசைத்தான். பிரமன் குடம் இசைக்கிறான். நாரதர் தனது மஹதி எனும் தம்பூரில் சுருதி சேர்த்தார். கந்தர்வர்கள், யக்ஷர்கள், சித்தர்கள், வித்யாதரர்கள், அமரர்கள், அப்ஸரஸ்கள், இன்னும் மூவுலக வாசிகளும் கண்டுகளிக்க சூலபாணியாக அம்பிகை காண இந்த சந்தியா தாண்டவத்தினை ஈசன் திருக்கைகள் சுழன்றாட அவருடன் மலைகளும், காற்றும், கடல்களும் உடன் சுழன்று புயல்வீசும் சூழல் ஏற்படுவதாக ரத்னாகரரின் சுபாஷிதரத்ன கோஷத்தில் சோமநாத பிரஸஸ்தியில் வர்ணிக்கப் படுகிறது. இந்த சந்தியா தாண்டவத்தில் ஈசனின் காலின் கீழ் முயலகன் இல்லை. காளிதாசரும் உஜ்ஜயினி மஹாகாளியின் சந்தியா தாண்டவத்தை இதே ரீதியில் வர்ணிக்கிறார். இதில் இவர் புஜதாருவனம் என்னும் பலவகைப் பாணியை எட்டு, பத்து, பன்னிரண்டு கைகள் அமைவதை வர்ணிக்கிறார். இதில் பாம்பை ஈசன் தன் அரையிலணிந்தும், தலைக்கு மேல் தூக்கிப் பிடித்துக் கொண்டும் ஆடினார். ஜபாகுசும புஷ்பங்கள் அலரும் மாலைவேளையில் மஹாகாளர் இந்த நடனத்தை ஆடுவதாக காளிதாசர் வர்ணிக்கிறார். இத்தகைய நடனத்தை எல்லாரும் கயிலாசநாதர் கோவிலிலுள்ள எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பத்தில் காண்கிறோம்.

இதைத் தவிர திருப்பரங்குன்றத்தில் அமைந்த லலித நடனத்தையும், மதுரை வெள்ளியம்பலத்தில் ஈசனின் கால் மாறியாடிய நடனத்தையும் சந்தியா தாண்டவம் என்பதுண்டு. இதில் ஈசனின் காலில் கீழ் முயலகன் உண்டு. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த வங்கத்தைச் சேர்ந்த வல்லாளசேன மன்னரின் நைக்தி செப்புப் பட்டயத்தில் தொடக்கத்திலேயே சந்தியா தாண்டவ வழிபாடு காணப்படுகிறது. பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்ரீ சைலம் கோவில் ஆனந்த தாண்டவத்தைப் போன்றுள்ள சந்தியா தாண்டவ சிற்பமும், முயலகனுடன் கூடிய மற்றொரு சிற்பமும் உள்ளன.

மணவை முனுசாமி எனும் புலவர் எழுதிய ‘நடராஜர் பத்து’ இந்த ஆனந்த தாண்டவத்தை விவரிக்கிறது. இதில் ஈசனின் ஆபரணங்களும், கையிலேந்திய ஆயுதங்களும், அவருடைய ஆட்டத்தினால் ஈர்க்கப்பட்டு அவருடன் சேர்ந்து ஆடியவர்களும் வர்ணிக்கப்படுவதைக் காண்கிறோம்.

ஈசனின் கையிலிருக்கும் ஜீவனின் மனமெனும் மான்ஆடுகிறதாம். மனம் ஒரு நிலையில் நிற்காது இங்குமங்கும் ஓடிக்கொண்டிருக்கும், ஒரு மானைப்போல். ஓரிடத்தில் நின்றாலும் அதன் கண்கள் இங்குமங்கும் அலையும். ஈசனின் கையிலிருக்கும் போதே அது நிலைபெறுகிறது. அதன் கண்களும் ஈசனை நோக்கி அவரிடத்திலேயே லயிக்கின்றன. ஈசன் ஆடும்போது அதுவும் ஆடுகிறதாம்.

ஈசனின் கையிலிருக்கும் மழுவென்னும் கோடாலியாடுகிறதாம். தன் தாள் சேர்ந்த ஜீவன்களின் பிறவித் தொடரை அந்த மழுவினால் வெட்டி பிறவியற்ற நிலையை அருளுகிறாராம் ஈசன். அவருடன் அந்த மழுவும் ஆடுகிறதாம்.

ஈசனின் தலையிலணிந்திருக்கும் மதியும், புனலான கங்கையும் ஆடுகின்றனவாம். நிறைமதியாய் எப்போதும் இருந்தவன், தன் இருபத்தேழு மனைவியருள் ரோஹிணியிடமே மிகுதியாகக் கொண்ட அன்பால், மற்ற மனைவியரின் மனத்தாங்கலையும், தனது மாமனாரின் சாபத்தையும் அடைந்து, அதனால் உடல் தேயத் தொடங்கி பொலிவிழந்த நிலையில் ஈசனின் தாள்களைச் சரணடைய, அவனைப் பிறைமதியாய் தனது சென்னியில் சூடினார் ஈசன். அதேபோல் பகீரதனின் தவத்திற்கிணங்கி வேகவதியாக வேகமாய் இறங்கிய ஆகாச கங்கையை உலகைக் காக்கும் பொருட்டு தன் விரிசடையில் சூடினார் ஈசன். அந்த மதியும், புனலும் ஆடலரசனின் ஆனந்த நடனத்தின்போது சேர்ந்தாடுகின்றனவாம்.

ஈசனின் பூணூலாடுகின்றதாம். கால் தண்டையயணிந்த மறைகள் ஆடுகின்றனவாம். ஈசனின் குண்டலங்களிரண்டும் ஆடுகின்றனவாம். அரையில் உடுத்தியிருக்கும் உடையான புலித்தோல் ஆடுகின்றதாம். தும்பை, அருகு மாலைகளாடுகின்றனவாம்.

ஈசன் ஆடுவதைக் கண்டால் எவருக்குத்தான் ஆடத் தோன்றாது?
மங்கை சிவகாமியும்,
சகோதரன் திருமாலும்,
மறை தந்த பிரமனும்,
வானவர்கோன் இந்திரனுடன் வானவர் கூட்டமும்,
குஞ்சர முகத்தோனும்,
குழந்தை முருகனும்,
ஞானசம்பந்தரோடு பதினெட்டு முனிவர்களும்,
அஷ்டதிக்பாலகரும்,
நந்தி வாகனமும்,
தேவலோகத்து நாட்டியப் பெண்களும் ஆட
இவர்களோடு திசையெங்கும் தன் குழல் பறந்தாட ஈசன்
ஆனந்தக் கூத்தாடினாராம்.

ஈசனின் கைகளில்
மானையும்,
மழுவையும் தவிர
உடுக்கை,
அக்னி,
சூலம்,
கத்தி,
கேடயம்,
பிரம்ம கபாலம்,
பாம்பு ஆகியவற்றையும் நாம் காண்கிறோம்.

வீசு கையினால் அர்த்த நாரீஸ்வர தத்துவத்தில் தன் ஆனந்த நடனத்தில் தேவியின் பாகமாகிய இடப் பதத்தினைக் காட்டுகின்றார் ஈசன், “தேவியின் பதத்தைப் பற்றிக் கொள். என் மறுகால் போல் ஸ்திரமான, அஞ்ஞானத்தை ஒடுக்கிய, வாழ்வினை அளிக்கிறேன்,” என்றுணர்த்தும் வகையில், வலக் கரத்தினால் அபயத்தையும் அருளுகின்றார். மதுரை வெள்ளியம்பலத்தில் மாறுகால் நடனமாடும் போதும் இவ்விரண்டு முத்திரைகளும் மட்டும் மாறுவதில்லை. சிவதாண்டவச் சிற்பங்களில் மாறாது காணும் மற்றொன்று ஈசனின் தலையில் காணும் விரித்த மயிற் பீலியும், விரித்த சடையும். சந்தியாகால அழகைக் கண்டு ஈசன் தனை மறந்தவராய் தன் சடைமுடிகளைத் தளர்த்திவிட்டு ஆடத்தொடங்கி விட்டார். ஆடலின் வேகத்திற்கேற்ப சடைகள் திக்கெங்கும் வீசிப் பனந்தன. அடியவர்களுக்கு வேண்டிய வளங்களை வாரிவழங்கும் கருணை மேகமான அவரைக் கண்டு மயில்களும் தோகை விரித்தாடின. அவற்றின் பீலிகளும் ஈசனின் சிரத்தை அலங்கரித்தன.

இந்த ஆனந்தத் தாண்டவத்தில் ஈசனின் கையிலிருக்கும் அக்னியை சம்ஹார சக்தியாகவும், உடுக்கையை ஸ்ருஷ்டி சக்தியாகவும் அறிஞர்கள் விவரித்த போதிலும், இலங்கையைச் சேர்ந்த பேரறிஞர் திரு. ஆனந்த குமாரஸ்வாமியும், இந்திய கலை, மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணரும், பேரறிஞரும், எனது தந்தையுமான, திரு. க. சிவராமமூர்த்தி அவர்களும் வேறுபட்ட கருத்தை உடையவர்களாக உள்ளனர். அவர்கள் தகுந்த ஆதாரத்துடன் அறுதியிட்டுக் கூறுவது ஈசன் கையிலிருக்கும் அக்னிதான் பரமாத்மாவின் ஸ்ருஷ்டி சக்தியான பேரொளியென்றும், அதனின்றும் தோன்றிய ஒளிச்சுடர்களான ஜீவாத்மாக்கள்தான் ஈசனின் பிரபாவலியிலுள்ள சிறு சிறு தீச்சுடர்களென்றும், அவை யாவும் லயமடைவது ஈசனின் வலக் கரத்திலிருக்கும் உடுக்கையின் நாதப் பிரஹ்மத்தில் என்பதும் தான். நாதமென்றாலே லயம் என்பது உடன் பிறந்த தொரு தத்துவமல்லவா! மேலும் அம்பாளின் பாகமான இடக் கரத்தில், தாயான அவளது செயலான ஸ்ருஷ்டியும், ஈசனின் பாகமாகிய வலக் கரத்தில் அவரது செயலான சம்ஹாரமும் இருப்பது தானே முறை?

இவை தவிர சதருத்ரீயத்தில், பார்வதியை மணப்பதற்கு விழைந்த சிவபெருமான், இமவானின் மனைவியான மேனையின் முன் இடக் கரத்தில் ஊது குழலும், வலக் கரத்தில் துடியும் ஏந்தி நடமிட்டதாக வர்ணிக்கப்படுகிறது.

பரத முனி பஞ்சபூதங்களின் உருவிலும் இறைவன் ஆடுவதாக ஜலமய மூர்த்தி, தேஜோமய மூர்த்தி, ஆகாஸமய மூர்த்தி என்றெல்லாம் குறிப்பிடுகிறார். சுழற்காற்றின் சுந்தர நடம், தீச்சுடரின் நெளியும் ஒளிநடம், ஒளிகளின் நடம், சூரிய, சந்திரர்களின் நடம், இவை யாவும் ஈசனின் நடமன்றோ! நடராஜ ஸ்தோத்திரத்தில் சிவனுக்கும், ஜீவனுக்கும் உள்ள இயற்கை நிலை ஒற்றுமையைக் கூறும் வகையில் “நடராஜரே, நீங்கள்தான் ஆடுகிறீர்களா? அல்லது பஞ்சபூத உடையில் உள்ள என்னை ஆடவைக்கிறீர்களா?” என வினவும் நிலையைக் காண்கிறோம்.

இவை தவிர வெவ்வேறு யோக நிலைகளைக் காட்டும் வீராட்ட தாண்டவங்கள் எட்டு வகைப்படும். அவை ஈசனின் வெவ்வேறு வெற்றிகளை முழங்குவனவாகவும் விளங்குகின்றன. திருவதிகையில் அட்டயோக சாதனையை விளக்கும் வகையில் திரிபுரசம்ஹாரராகவும், கண்டியூரில் விந்து ஜெயம், மூலாக்னி எழுப்புதல் ஆகியவற்றை விளக்கும் வகையில் பிரஹ்மசிரச்சேதம் செய்த நிலையிலும்; திருக்கொறுக்கையில் சிவதிருஷ்டி பெறல், ஞானக்கண் நிலைகளை விளக்கும் வகையில் காமதஹனராகவும்; திருவழுவூரில் முத்திச் சிறப்பு, சிவவொளி விளக்கம் ஆகியவற்றை விளக்கும் வகையில் கஜசம்ஹாரராகவும்; திருக்கோவிலூரில் அஞ்ஞான அழிப்பை விளக்கும் வகையில் அந்தகாசுர வதம் புரிந்த நிலையிலும்; திருப்பறியலூரில் சிவராஜயோகம், அக்னிகாரியம், பசித்துவ நீக்க அகவேள்வி ஆகியவற்றை விளக்கும் வகையில் தக்ஷன் வேள்வி தகர்த்த நிலையிலும்;திருவிற்குடியில் வாயுயோகசாதனை, மூலாதாரம் ஆகியவற்றை விளக்கும் வகையில் ஜலந்தர சம்ஹார மூர்த்தியாகவும்; திருக்கடவூரில் அங்கியோகம், மூலநாடி சுஷும்னை வைபவம் ஆகியவற்றை விளக்கும் வகையில் காலசம்ஹார மூர்த்தியாகவும் ஈசன் விளங்குகிறார்.

மும்மலங்களே முப்புரமாகக் கொண்டு ஈசன் ஆகியவற்றை நாசம் செய்து யோகியரைக் காத்தலே திரிபுர சம்ஹாரமென்பர். இந்நிலையில் ஈசன் கரங்களில் வழக்கமான சூலம், மழு, கத்தி, கேடயம் தவிர பினாகமெனும் வில்லையும், பாசுபதமெனும் அம்பையும் காண்கிறோம்.

யோகநெறியில் விந்து ஜெயம் சிறப்பானதொன்று. மூலாக்னியை மேலெழுப்பி விந்து நாசம் ஏற்படாது தடுத்தலை பிரம்ம சிரச்சேதமென யோகநெறியில் கூறுவர். தானும் ஐந்து சிரம் கொண்டவனே, ஈசனுக்கு சமமானவனே எனும் பிரம்மனின் கர்வத்தை அடக்க பைரவர் மூலம் அவனது நடுச்சிரத்தைக் கொய்து அந்த பிரம்ம கபாலத்தை பிக்ஷா பாத்திரமாய் ஏந்தி ஈசன் தாண்டவமாடுகிறார்.

வாசியோக மேன்மையால் குண்டலினியை மேலெழுப்பி மேனிலைப் பலன்களை எய்துவதை காமதஹனமாக யோகியர் கூறுவர். சிவத்தின் மேன்மையினை விளக்கவே காமதஹனம் விளைந்தது.

யோகநெறியில் ஆறு ஆதாரநிலைகளிலிருக்கும் தேவதைகளின் அருள்நிலைகள் மறைந்து சஹஸ்ராரத்தில் அக்னி தோன்றுதலை கஜசம்ஹாரமாகக் கூறுவர். சிவனைத்தவிர வேறு யாராலும் அழிவிலா வரம்பெற்ற கஜமுகாசுரனைக் கொன்று ஈசன் கரியுடை போர்த்து தாண்டவமாடுகிறார்.

முதுகெலும்பின் முடிவிடமாகிய குருத்து அல்லது குந்தகம் எனும் பகுதிக்கு மேல் சூரிய ஒளி, ஆன்ம ஒளி, சோம ஒளி, எனும் மூவொளி அமைந்த பகுதியை சூலம் என்பர். யோகப் பயிற்சியின் மூலம் அந்தகமாகிய அறியாமையினை நீக்கி சுஷும்னையில் ஆன்ம ஒளி காணுதலே அந்தகாசுர சம்ஹாரமென திருமந்திரம் கூறுகிறது. இந்நிலையில் ஈசனின் தாண்டவத்தை திருக்கோவிலூரில் காண்கிறோம்.

சிவசக்தி ஐக்கியமான ஆண்-பெண் அம்சக் கூட்டுறவு வேள்வி எனப்படும். இதனை ஈசனுக்கு அர்ப்பணமாகச் செய்ய வேண்டும். ஈசன் அருளின்றி யோகத்தில் விந்து ஜெயம் கிட்டுவது இயலாது என்பதைக் காட்டுவதே தக்ஷன் வேள்வி தகர்த்தல். ஈசனின் இந்நிலையை திருப்பறியலூரில் காண்கிறோம்.

யோகத்தின்போது கீழ்நோக்கு இயல்புடைய ஜலந்தரனெனப்படும் அபானவாயுவை மேல்நோக்கிப் பிராணனுடன் கலக்கச் செய்யும் யோகமுறையை அங்குலி யோகம் என்பர். இந்நிலையில் பிராணனுடன் கலந்து அபானன் சஹஸ்ராரத்தில் ஈசனின் பேரொளியில் இணைவதை ஜலந்தர யோகமென திருமந்திரம் கூறும். இந்நிலைத் தாண்டவத்தை திருவிற்குடியில் காண்கிறோம்.

மூலக்கனலை சுஷும்னை வழியாக சஹஸ்ராரத்துக்கு எழுப்பும்போது காலமெனும் யமபயம் ஒழியும். பிரஹ்மரந்திரப் பேரொளியில் லயித்து சாகாதிருத்தலை அங்கியோகம் என்பர். பிரஹ்மரந்திரத்தில் ஊர்த்துவதிருஷ்டியால் பார்த்து சஹஸ்ரார தளத்தில் சிவ - ஜீவ, சிவ - சக்தி ஐக்கியப் பேரொளியில் லயிக்கும்போது எழும் பேரொளி வைபவத்தை காலசம்ஹார வைபவம் என்பர். இத்தாண்டவத்தை திருக்கடையூரில் காண்கிறோம்.

இந்த எட்டு வீராட்டங்களின் அம்சமும் நடராஜரின் ஆனந்த தாண்டவத்தில் ஒருமை எய்துவதைக் காண்கிறோம். ஸ்ரீருத்ரத்தின் நடுமணியாம் ‘நம : சிவாய’த்தில் ஐந்து பூதங்களும், ஐந்து தொழில்களும், ஐந்து பிரஹ்ம நிலைகளும், ஐந்து திசைகளும், ஐந்து சக்திவேதங்களும் அடங்குவதுடன் சிவதாண்டவ உருவின் ஐந்து பாகங்களும் கூட அடங்குவதைக் காண்கிறோம்.

சிவதாண்டவத்தில் ஐம்பெரும் பாகமென ஐந்தெழுத்து மந்திரம், ஐந்து முகங்கள் (ஐந்து பிரஹ்மங்கள்), ஐந்து திசைகள், ஐந்து பூதங்கள், ஐந்தொழில்கள், ஐந்து சக்திபேதங்கள் ஆகியவை உள்ளடங்கியுள்ளன. துடி எனும் உடுக்கையில் ‘ந’ எனும் எழுத்தும், ஸத்யோஜாதமெனும் பிரஹ்மநிலையும், மேற்கு திசையும், பிருத்வி எனும் பூதமும், படைத்தலைச் செயும் பிரம்மனும், கிரியா சக்தியும் அடங்கக் காண்கிறோம்; அமைந்த கரத்தில் ‘ம’ எனும் எழுத்தும், தத்புருஷமும், கிழக்கு திசையும், வாயுவும், காத்தல் எனும் தொழில் புரியும் விஷ்ணுவும், ஞான சக்தியும் அடங்கக் காண்கிறோம்; அக்னியில் ‘சி’ எனும் எழுத்தும், அகோரமும், தெற்கு திசையும், தேஜஸும், அழித்தலெனும் பணிபுரியும் ருத்ரனும், இச்சா ஸக்தியும் அடங்கக் காண்கிறோம்; ஊன்றிய பாதத்தில் ‘வா’ எனும் எழுத்தும், வாமதேவமும், வடக்கு திசையும், நீரெனும் பூதமும், திரோதனமெனும் மறைத்தலைப் புரியும் சதாசிவனும், ஆதிசக்தியும் அடங்கக் காண்கிறோம்; குஞ்சித பாதத்தில் ‘ய’ எனும் எழுத்தும், ஈஸானமும், உச்சிதிசையும், ஆகாயமும், அருளலைப் புரியும் மஹேஸ்வரரும், பராசக்தியும் அடங்கக் காண்கிறோம்.

அவரது ஆனந்த நடனம் மூலம் அவரே உணர்த்தும் தத்துவத்தை உணர்ந்து தூக்கிய திருவடியாம் அம்பிகையின் பாதத்தை சிக்கெனப் பற்றி, அவரருளால் அபஸ்மாரம் நீங்கப் பெற்று ஸ்திர வாழ்வை நாம் அடைவோமாக. அவரது இடக்கரம் அமைந்த தேஜஸினின்று ஒரு பொறியாகப் பிறந்த நாம், அவரருளால் அவரது நினைவில் வாழ்ந்து அவரது வலக்கரமமர்ந்த துடியில் லயத்தை அடைய அவரது திருவடி போற்றி வேண்டுவோமாக.

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

Tuesday, April 2, 2013

சிதம்பர ரகசியத்தை பற்றி


சிதம்பர ரகசியத்தை பற்றி தெரிந்து கொண்டீர்கள் அல்லவா ...

மனிதனின் உருவ அமைப்பிற்கும், தங்கத்தால் ஆன நடராஜர் சன்னதிக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது.

பொன்னம்பலத்தில் நமசிவாய மந்திரம் பொறிக்கப்பட்டு வேயப்பட்டுள்ள 21 ஆயிரத்து 600 தங்க ஓடுகள், மனிதன் ஒரு நாளைக்கு விடும் சுவாசத்தின் எண்ணிக்கையைக் குறிக்கும் அளவில் உள்ளது..

பொன்னம்பலத்தில் அடிக்கப்பட்டுள்ள 72 ஆயிரம் ஆணிகள், மனிதனின் நாடி நரம்புகளைக் குறிக்கிறது.

கோயிலில் உள்ள 9 வாசல்கள் மனித உடலிலுள்ள 9 துவாரங்களைக் குறிக்கிறது.

இதுதவிர ஆன்மிக ரீதியான அமைப்பும் உண்டு. ஐந்தெழுத்து மந்திரமான சிவாயநம என்பதின் அடிப்படையில் பொன்னம்பலத்தின் ஐந்து படிகளும், 64 கலைகளின் அடிப்படையில் சாத்துமரங்களும், 96 தத்துவங்களைக் குறிக்கும் விதமாக 96 ஜன்னல்களும், 4 வேதங்கள், 6 சாஸ்திரங்கள், பஞ்ச (5)பூதங்களின் அடிப்படையில் தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன.

சித்+அம்பரம்=சிதம்பரம். சித்அறிவு. அம்பரம்-வெட்டவெளி. மனிதா! உன்னிடம் ஒன்றுமே இல்லை என்பது தான் அந்த ரகசியத்தின் பொருள்.மாயை விளக்கி இ ஆகாய ரூபமாக உள்ள இறைவனை காணுங்கள் .

மேலும் பல சிறப்புகளைக்கொண்டது அத்திருக்கோயில்.. முக்கியமானவற்றை உங்களோடு பகிர்ந்து கொண்டோம்..

இத்துடன் சிதம்பரம் நடராஜ பெருமாள் கோயிலைப்பற்றிய பதிவுகள் நிறைவடைகின்றது .

Thursday, March 28, 2013

கோபுர ரகசியமும், நம் முன்னோரின் விஞ்ஞான அறிவாற்றலும்!!!

கோபுர ரகசியமும், நம் முன்னோரின் விஞ்ஞான அறிவாற்றலும்!!!

முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?! கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.

கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன.

நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள். காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.

இவ்வளவுதானா? இல்லை, பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது. அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள். காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த சக்தி இருக்கிறது. அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்..?! ஆச்சர்யம்தான். அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது.

ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் 'எர்த்' ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்!

சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. அது நாலாபுறமும் 75000சதுர மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது! இது ஒரு தோராயமான கணக்கு தான்.

இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.

"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"

என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது.

நன்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்



1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்சி
4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
5) துன்பத்திலும் துணிவு
6) செலவத்திலும் எளிமை
7) பதவியிலும் பணிவு

வழிகாட்டும் ஏழு விஷயங்கள்

1) சிந்தித்து பேசவேண்டும்
2) உண்மையே பேசவேண்டும்
3) அன்பாக பேசவேண்டும்.
4) மெதுவாக பேசவேண்டும்
5) சமயம் அறிந்து பேசவேண்டும்
6) இனிமையாக பேசவேண்டும்
7) பேசாதிருக்க பழக வேண்டும்

நல்வாழ்வுக்கான ஏழு விஷயங்கள்

1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்
2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள்
3) பிறருக்கு உதவுங்கள்
4) யாரையும் வெறுக்காதீர்கள்
5) சுறுசுறுப்பாக இருங்கள்
6) தினமும் உற்சாகமாக வரவேற்கத்தயாராகுங்கள்
7) மகிழ்ச்சியாக இருக்க முயற்ச்சி மேற்கொள்ளுங்கள்

கவனிக்க ஏழு விஷயங்கள்

1) கவனி உன் வார்த்தைகளை
2) கவனி உன் செயல்களை
3) கவனி உன் எண்ணங்களை
4) கவனி உன் நடத்தையை
5) கவனி உன் இதயத்தை
6) கவனி உன் முதுகை
7) கவனி உன் வாழ்க்கையை

Thursday, March 7, 2013

தமிழ் நாகரீகம் உலகின் முதல் நாகரீகம்! – ஓர் ஆய்வு!

தமிழ் நாகரீகம் உலகின் முதல் நாகரீகம்! – ஓர் ஆய்வு!

தமிழும் தமிழர் நாகரிகமும் 9.500 ஆண்டுகள் பழமைமிக்க எதியோபிய நாகரிகத்தினும் மேலாக.. எதியோபிய நாகரிகம் சூடான்-எதியோபியாவின் வட பகுதியில் நைல் ஆற்றுக் கரை ஓரம் தோன்றி வளர்ந்தது. இந் நாகரிகம் எகிபது நாகரிகத்தினும் பழமை மிக்கது எனறும் உண்மையில் எதியோபிய நாகரிகரே எகிப்து நாகரிகத்தையும் அமைத்ததாக சொல்லப்படுகிறது. ஆயினும் மேலையர் எகிப்தையே பெருமைபட பேசுகின்றனர்.

உலகில் பலருக்கு எதியோபியாவில் பழம் நாகரிகம் இருந்ததே அறியாமல் உள்ளனர். எதியோபிய நாகரிகம் காலத்தால் எகிப்தினும் முற்பட்டது, இதாவது, 9,500 ஆண்டுகள் பழமையுடையதாய் சொல்லப்படுகிறது. இங்கு சிந்து எழுத்துகளை ஒத்த எழுத்துகள் மண்டி எனும் ஊரில் கண்டெடுக்கப்பட்டன. இதற்கு பிற்பட்டதே எகிப்தின் எழுத்துகள். நாகரிகத்தில் எதியோபியா எகிப்துக்கு சற்றும் குறைவில்லாதது.

எதியோபிய நாகரிக மன்னர் பெயர்களைக் காணும் போது இவர்களுடைய முன்னோர் தமிழராய் இருத்தல் வேண்டும் என்ற கருத்தை தோற்றுவிக்கிறது. இந்நாகரிக மன்னர் பெயர்களில் சேரர் பெயர்கள் இடம்பெறுவது சேரம் ஆட்சி ஒர் காலத்தே இங்கு வழங்கி இருக்க வேண்டும் எனபதை உணர்த்துகிறது.

தமிழோடு ஒத்துள்ள இந்நாகரிக மன்னர் பெயர்களை சிந்துவெளி முத்திரைப் பெயர்களோடும், சங்க இலக்கியப் பெயர்களோடும், பிற நாகரிக மன்னர்தம் தமிழ்ப் பெயரோடும் ஒப்பிட்டு ஆய்கிறது இக்கட்டுரை. இந் நாகரிக மன்னர் பெயர் ஒப்பீடு இந்நாகரிகங்களின் மக்கள் ஒரு குலைக்காய் போல் ஒரு மூல நாகரிகத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும், அதோடு அம்மூல தாய் நாகரிகம் தமிழர் உடையது என்று விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

இவ்வுலகில் எழுத்துகள் சற்றொப்ப 6.500 ஆண்டுகள் அளவில் தோன்றின. அதற்கு முன் எழுத்துகள் கிடையா. தமிழின் காலம் கல்வெட்டு, சங்க இலக்கியச் சான்றுகளின் படி 2,500 ஆண்டுகள் பழமையதாக சொல்லப்படுகின்றது. எதியோபிய மன்னர்தம் தமிழ்ப் பெயர்கள் 6,500ஆண்டுகள் பழமை மிக்கதால் தமிழின் பழமையை 6,500 ஆண்டுகளுக்கு முன் போடலாம், அதோடு எதியோபியாவில் கிடைத்த மட்பாண்டங்கள் ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழிகளை முழுதும் ஒத்துள்ளதால் தமிழும் தமிழர் நாகரிகமும் 9.500 ஆண்டுகள் பழமைமிக்க எதியோபிய நாகரிகத்தினும் மேலாக, இதாவது, 10,000 ஆண்டுகள் தொன்மையதாய் கொள்ளலாம்.

இப்பெயராய்வு எதியோபிய மன்னர் Tafari Mokonnen 1922 இல் வெளியிட்ட மன்னர் பெயர் பட்டியலை அடிப்படையாகக் கொள்கிறது. ஓரிப் பழங்குடியில் மொத்தரம் 21 பேர் ஆண்டுள்ளனர்.

முதலாமவர் O r i or aram 4530-4470BC - தமிழில் ஓரி என்பது செப்பமான வடிவம். கடைஎழு வள்ளல்களுல் ஒருவனாக சங்க இலக்கியத்தில் குறிக்கப்படுபவன் வல் வில் ஓரி என்பான். எனவே ஓரி எனம் பெயர் 6,500 ஆண்டுகள் பழமையது.

Gariak 4470-4404 BC தமிழில் காரி அக் காரி அக்கன் என செப்பமாக படிக்கலாம். சங்க இலக்கியத்தில் கடைஎழு வள்ளல்களுல் ஒருவனாக குறிக்கப்படுபவன் மலையமான் திருமுடிக் காரி என்பான். இப்பெயர் கொரிய நாகரிகத்தில் Dangun வழிமரபில் ஒரு மன்னனுக்கு Gareuk 2182-2137 BC என இடப்பட்டுள்ளது. தமிழில் காரி அக் காரி அக்கன் என செப்பமாக படிக்கலாம். அக்கன் - வடலூர் வட்ட மருங்கூரில் கிடைத்த பிராமி எழுத்து பொறித்த பானைஓட்டில் அதியகன் என்று உள்ளது. இதை அத்தி + அக்கன் என பிரித்து படிக்க வேண்டும். அக் பிற நாகரிகங்களில் அல், ஐ, இ, உ, அம் ஈறு பெற்றும் வரும். தெலுங்கில் அக்கராஜு என்ற வழக்குள்ளது. எகிப்து நாகரிகத்தில் 4, 7 & 8 ஆம் ஆள்குடிகளில் காரி என பெயர் கொண்டோர் பலர்.

Elaryan 4404-3836 BC - தமிழில் எல் அரையன் எனபது செப்பமான் வடிவம். எல் - ஒளி, சிவப்பு ஆகிய பொருள்களை கொண்டது. எல்லன், எல்லப்பன் ஆகிய பெயர்கள் இன்றும் வழங்குகின்றன. மேலை நாடுகளில் எல் வழங்குகிறது. அரயன் - அரசன் எனும் பொருள் உடையது. இப்பெயர் தமிழ் இலக்கியத்தில் பல்லிடங்களில் ஆளப்பட்டுள்ளது

Eylouka 3836 - 3932 BC (QUEEN) - தமிழில் அரசி எயில் அக்கா எழில் அககாள் என செப்பமாக படிக்கலாம். இது ஒரு தூய தமிழ்ச் சொல். பண்டைத் தமிழகத்தில் பெண் அரசுப் பொறுப்பேற்றதற்கான சான்று இல்லா நிலையில் எதியோபியாவில் பெண் ஆள்வதற்கு தடை இருந்ததில்லை என்பதற்கு இவள் சான்று.

Kam 2713 - 2635 BC - தமிழில் காம் காமன் என செப்பமாக படிக்கலாம். காமன் ஒரு தூய தமிழ்ச் சொல் சமஸ்கிருதம் அல்ல. இங்கு அன் ஈறு இல்லாமல் உள்ளது. சிந்துவெளி முத்திரைகளில் காமன் என்ற பெயர் வழங்குகின்றது. 63 நாயன்மாருள் ஒருவர் கலிக் காம நாயனார். அதில் காமன் இடம்பெற்றுள்ளது. சப்பான் நாகரிகத்தல் காம என்ற பெயர் வழங்குகிறது.

Elektron 2515 - 2485 BC - தமிழில் எல்லி கீற்றன் என்பது செப்பமான வழக்கு. எல் இகர ஈறு பெற்றுள்ளது. சீன நாகரிகத்தில் Liao ஆள்குடி அரசனின் இயற்பெயர் Yelu Abaoji 907 -926 AD தமிழில் எல்லு அப்பய்ய தி எல்லு அப்பய்யன் தி என செப்பமாக படிக்கலாம். இங்கு எல் உகர ஈறு பெற்றுள்ளது. அப்பய்யன் - அப்பய்ய தீக்ஷிதர் என்பவர் நாயக்கர் கால அறிஞர். தி - சீனத்தில் வேந்தன் என பொருள் தரும்.

Manturay 2180- 2145 BC - தமிழில் மாந்தரை என்பது செப்ப வடிவம். ஐகார ஈறு பெற்றுள்ளது. மாந்தரன் சேரர்க்குரிய பெயர். எதியோபிய நாகரிகத்தில் சேரர் ஆட்சி எற்பட்டதற்கான முதல் சான்று. மாந்தர - மாஞ்சர என மருவி நடு ஆப்பிரிக்காவில் கிளிமாஞ்சரோ என்ற மலைக் காட்டிற்கு பெயராக வழங்குகிறது.

Azagan 2085 - 2055 BC - தமிழில் அழகன் என்பது செப்பமான வடிவம். தமிழுக்கே சிறப்பான ழகரமும் அன் ஈறும் இடம் பெற்றுள்ளன. அழகப்பன், அன்பழகன் ஆகியன இன்றும் வழங்கும் தமிழ்ப பெயர்கள்.

Ramen Phate 2020-2000 BC - தமிழில் இராமன் வட்டி என்பது செப்பமான தமிழ் வடிவம். இங்கு வகரம் பகரமாக திரிந்துள்ளது. இராமன் ஒரு தூய தமிழ்ச் சொல். வால்மீகி இராமாயணத்திற்கு முன்பே சங்க இலக்கியங்களில் பயின்று வருகிறது. எகிப்து மன்னர் பலர் இப்பெயர் கொண்டுள்ளனர்.

Ramesses I 1295-1294 BC - தமிழில் இராமி சே இராமி சேயன் என செப்பமாக படிக்கலாம். இராமன் இகர ஈறு பெற்றுள்ளது. சேயன் - சிந்து வெளி முத்திரைகளில் பரவலாக அன் ஈறு பெற்றும், பெறாமல் சேய் என்றும், இன்னம் குறுக்கமாக சே என்றும் வழங்குகிறது.

Wan Una 2000 BC - தமிழில் வண் உன்ன வண்ணன் உன்னன் என செப்பமாக படிக்கலாம். வண்ணன் - சிந்து வெளி முத்திரைகளில் வழங்கும் பெயர். சீன நாகரிகத்தில் மேற்கு Han ஆள்குடி அரசர் ஒருவர் பெயர் Liu Bang 206 -195 BC - தமிழில் ஒளிய பண் > ஒளியன் வண்ணன் என செப்பமாக படிக்கலாம். வ- ப திரிபு. சீன மொழியில் ன்>ங் என மூக்கொலி பெறும். சிந்து வெளியில் ஒளியன் என்ற பெயர் அருகி வழங்குகிறது. உன்னன் - தமிழக சிந்து எழுத்து பானைஓடுகளில் பொறிக்கப்பட்ட பெயர். இகர ஈறு பெற்று உன்னி என்றும் ஆகும். இது உன்னி சேரநாட்டு வழக்கு. எகிபது நாகரிகத்தில் 5 ஆம் ஆள்குடி மன்னன் ஒருவன் பெயர் Unas 2375 -2345 BC - தமிழில் உன்ன > உன்னன் என செப்பமாக படிக்கலாம்.

Piori 2000 - 1985 BC - தமிழில் பய் ஓரி > வய் ஓரி > வய்யன் ஓரி என செப்பமாக படிக்கலாம். வய் - வெம்மை, வைதல் என்பதன் வேர், வய்யன் - சிந்து வெளியில் வழங்குகிறது, செங்கல்பட்டு அருகே வய்யா/வையா ஊர் என ஓர் ஊர் உள்ளது. இது சீன நாகரிகத்தில் Xi, Bi என திரிந்து பேரளவில் வழங்குகிறது.

Kosi Yope (queen) 1871 - 1890 BC - தமிழில் அரசி காதி யாப்பி > காத்தி யாப்பி என செப்பமாக படிக்கலாம். தகரம் சகர இன ஒலியான ஸகரமாக திரிந்துள்ளது. காத்தி - தமிழக ஊர்புறங்களில் பெண் பெயராக வழங்குகிறது. ஆண் பால் பெயரான காத்தன் சிந்து வெளி முத்திரைகளில் வழங்குகிறது, அங்கு ஒரு பெண் பால் பெயர் கூட காணப்படவில்லை. யாப்பி - இது ஒரு முது பழந்தமிழ்ச் சொல். ஆண் பால் பெயர் யாப்பன் என்பது.

Etiyopus I 1856 - 1800 BC - தமிழில் எட்டி யாப்ப > எட்டி யாப்பன் என செப்பமாக படிக்கலாம். எட்டி - வணிகர்க்கு உயர்ந்தோன் எனும் பொருளில் பட்டமாக அளிக்க பட்டது. எட்டியப்பன் இன்றும் தமிழகத்தில் வழங்குகிறது. யாப்பன் - ஒரு பழந்தமிழ் பெயர். தென் அமெரிக்க இன்கா நாகரிகத்தல் ஒருமன்னன் பெயர் . Pachacutec Inca Yupanqui 1438 - 1471 AD .- தமிழில் பச்சகுடி யாப்அங்கை > பச்சைகுடி யாப்பன் அங்கை என செப்பமாக படிக்கலாம். அஙகன் அங்கு ஆகிய பெயர்கள் சிந்து வெளி முத்திரையில் வழங்குகின்றன. அங்கப்பன், அங்கையன் இன்றும் தமிழக்த்தில் வழங்கும் பெயர்கள். இன்கா, மாயன் நாகரிகங்களும் தமிழர் நாகரிகங்களே.

Lakndun Nowarari. தமிழில் இள கந்தன் நவ்வர் அரி என்பது செப்பமான வடிவம். இள - இளமைப் பொருள். சங்க இலக்கியங்களில் இளங்குமணன், இளஞ் சேன்(ட்) சென்னி என வழங்குகிறது. ஐரோப்பாவில் படை நடத்திய Huna மன்னன் அத்திளா > அத்தி+இள எனபான். சிந்துவெளி முத்திரையில் அத்திள வழங்குகிறது. கந்தன் - சிந்துவெளி முத்திரையில் அருகி வழங்குகிறது. இகர ஈறு பெற்று கந்தி எனவும் ஆகும். புகார் நகரின் அக ஊர் ஒன்றுக்கு பெயர் காகந்திபுரம். நவ்வன் - சிந்துவெளி முத்திரையிலும், தமிழக பானைஓட்டு சிந்து எழுத்திலும் காணப்படுகிறது. இங்கு அர் ஈறு பெற்றுள்ளது. அரி > அரியா இன்றும் தமிழகத்தில் வழங்கும் பெயர். புதுச்சேரியின் ஓர் ஊர் அரியான்குப்பம் > அரியாங்குப்பம்.

Senuka I 1700 -1683 BC - தமிழில் சேன் உக்க > சேனன் உக்கன் என செப்பமாக படிக்கலாம். சேனன் - சிந்து வெளிப் பெயர். இளஞ் சேன்(ட்) சென்னியில் பயில்கின்றது. உக்கன் - சிந்து வெளி முத்திரைப் பெயர் 5,300 ஆண்டு சிந்து மட் பாண்டத்தில் உக்கங்கு என பொறிக்கப்பட்டுள்ளது. Aktis Sanis 1531 BC - தமிழில் அஃகுதி சாணி > அஃகுதை சாணன் என செப்பமாக படிக்கலாம். அஃகுதை - சங்க இலக்கியத்தில் குறிக்கப்படும் பெயர். சாணன் - இகர ஈறு பெற்று சாணி ஆகியது. யகர சகர திரிபில் யாணன் > சாணன் ஆகும். யாணனும் சாணனும் சிந்து முத்திரைப் பெயர்கள். சீனத்தில் Yang உண்டு.

Mandes 1531 - 1514 BC - தமிழில் மாந்தி என்பது செப்பமான வடிவம். உகர ஈறு பெற்று மாந்து எனவும், ஐகாரம் பெற்று மாந்தை எனவும் ஆகும். மாந்தரன் > மாந்து + அரன் ஒரு சேரப் பெயர். மாந்தை சேரர் நகரம்.
Amoy 1481 -1460 BC - தமிழல் ஆமை > ஆமன் இதன் செப்பமான வடிவம். யா > ஆ திரிபு, யானை - ஆனை, யாந்தை - ஆந்தை போல் யாமன் ஆமனாக திரிந்தது. ஐகார ஈறு பெற்று ஆமை ஆனது. குட்டாமன் - குட்டை+ஆமன் கேரளத்தில் இன்றும் வழங்குகிறது. முட்டத்து ஆமக் கண்ணியார் > முடதாமக்கண்ணியார் பெண் புலவர்.
இசுரேலின் யூதேய அரசன் பெயர் Amon 642-640 BC . Titon Satiyo 1256 - 1246 BC - தமிழில் திட்டன் சாத்தைய > திட்டன் சாத்தையன் என செப்பமாக படிக்கலாம். திட்டன் - திட்டன் குடி > திட்டக்குடி ஓர் தமிழக ஊர். கார்தேஜ் நாகரிக அரசியின் பெயர் Dido 814 BC. காசுமீர அரசிப் பெயர் Dida 958 AD.அரசிகளின் பெயர்கள் கடுஒலி பெற்றுள்ளன. சாத்தன் + அய்யன் ஒரு கூட்டுப் பெயர். சாத்தன் - சிந்து வெளி முத்திரைப் பெயர். சாத்தப்பன் இன்று வழங்கும் பெயர். கொரிய நாகரிக Danjun வழிவந்த மன்னன் பெயர் sotae 1357 -1285 BC.சாத்தை > ஐகார ஈறு பெற்றுள்ளது.

Sanuka 1231 - 1226 BC - தமிழில் சாண் உக்க > சாணன் உக்கன் என செப்பமாக படிக்கலாம். யகர சகர திரிபில் யாணன் சாணன் என திரிந்தது. சாணன் உக்கன் சிந்து வெளிப் பெயர்கள். ஈரானின் ஈலம் நாகரிக மன்னன் பெயர் .Ukku-Tanish 2500 BC என்பது . பாபிலோன் மன்னன் பெயர் Nabu Suma Ukin II 732 BC. சீன நாகரிகத்தில் Shang ஆள்குடி மன்னன் கோவில் பெயர் Tai Zang 1600 BC தமிழில் தாய் சாண் என்பது. சீனத்தில் ன்>ங் என மூக்கொலி பெறும்.

Wiyankihi I 1140 - 1131 BC - தமிழில் வய்யங்கி > வய்யன்+ அங்கி என செப்பமாக படிக்கலாம். சங்க இலக்கியத்தில் ஒரு மன்னன் பெயர் வய் ஆவி என்பது. சீன நாகரிகத்தில் shang ஆள்குடியில் ஒரு மன்னனுடைய இயற்பெயர் Bian 1600 BC. அதே ஆள்குடியில் இன்னொரு மன்னனுக்கு ஆட்சிப் பெயர் Xiao xin 1300 - 1251 BC - தமிழில் வய்ய வய்யன் என்பது. சீனத்தில் வய் > Xi என்றும் Bi என்றும் திரிந்துள்ளது.

Ramenkoperm 1057 -1043 BC - தமிழில் இராமன் கோப்பெரும் என்பது செப்பமான வடிவம். கோப்பெரும் பெண்டு சங்க இலக்கியத்தில் குறிக்கப்படும் பெண் பெயர். சோழன் ஒருவன் கோப்பெருஞ் சோழன் எனப்பட்டான்.

Pino stem 1073 BC - தமிழில் பிண்ண சேம் > விண்ணன் சேமன் என செப்பமாக படிக்கலாம். வ - ப திரிபு. விண்ணன் - சங்க இலக்கியத்தில் விண்ணன் தாயன் என்ற பெயர் இடம்பெறுகிறது. கொரிய நாகரிகத்தில் Dangun வழிவந்த மன்னன் பெயர் Wina 1610 - 1552 BC தமிழில் விண்ண > விண்ணன். சேமன் - சிந்து முத்திரையயில் வழங்கும் பெயர். ஏமன் சகரமுன்மிகை(Prothesis) பெற்று சேமன் ஆனது. விழுப்புரம் அருகே ஏமப்பூர் என்று ஓர் ஊர் உள்ளது.

Hanyon I 957 -956 BC - தமிழில் கான் யாண் > கானன் யாணன் என செப்பமாக படிக்கலாம். இங்க ககரம் ஹகரமாகியது. சிந்து வெளி முத்திரைகளில் அன் ஈறு பெறாமல் இவ்விரு பெயரும் வழங்குகின்றன. சீனத்தின் கிழக்கு Han குடியில் ஒரு மன்னன் பெயர் Yan Kang 220 AD - தமிழில் யாண் கான். ன்>ங் என மூக்கொலி பெறும்.

SeraI (Tomai) 956 - 930 BC - தமிழில் சேர (தாமை) > சேரன் (தாமன்) என செப்பமாக படிக்கலாம். தாமன் ஐகார ஈறு பெற்றுள்ளது. அல் ஈறு பெற்றும் வழங்கும். தாமல் காஞ்சி மாவட்டத்தில் உள்ள ஓர் ஏரி. சேரன் சேரர்க்கான குடிப்பெயர். பாபிலோன் மன்னன் ஒருவன் பெயர் Tiglath Pileser 732 -729 BC - தமிழில் திகழ் ஆத் வில்லி சேர் > திகழ் ஆதன் வில்லி சேரன் என செப்பமாக படிக்கலாம். நெடுஞ் சேரல் ஆதன் ஒரு புகழ் மிக்க சேர மன்னன். சேரர் வில்லவர் எனப்பட்டதுடன் அவர் கொடிச் சின்னமும் வில். இப்பெயர் சேரர் பாபிலோனையும் ஆண்டதற்கு ஒரு சான்று. Nicauta Kandae(queen) 740 - 730 BC - தமிழில் அரசி நய் காத்த கந்தை எனபது செப்பமான் வடிவம். நய்யன் காத்தன் கந்தன் சிந்துவெளி முத்திரைகளில் பயில்வுறுகிறது. கந்தை பெண் பாலை தெளிவாக குறித்து வந்துள்ளது.

Erda Amen Awseya 681 - 675 BC - தமிழில் எருத ஆமன் அவ் சேய > எருதன் ஆமன் அவ்வன் சேயன் என செப்பமாக படிக்கலாம். எருதன்- எருதின் வலிமையை ஆணின் வலிமைக்கு ஒப்பிட்டு இடும் பெயர். காளை என்ற பெயர் இதற்கு சான்று. சீனத்தின் தெற்கு Nan Liang அரசின் ஓர் அரசன் பெயர் Tufa Rutan 402 - 414 AD -தமிழில் தூவா எருதன் > தூவான் எருதன் என செப்பமாக படிக்கலாம். தூவாக்குடி தமிழக ஊர். சேயன் - கொரிய நாகரிகத்தில் Gija வழிவந்த மன்னன் பெயர் Seon hye 925 -898 BC தமிழில் சேயன் கயி என்பது செப்பமான வடிவம். கயி சிந்து வெளியில் காஇ என பயில்வுற்றுள்ளது. அவ்வன் - தேனி வட்டம் புலிமான்கோம்பையில் கிட்டிய நடு கல் பிராமி கல்வெட்டில் வேள் ஊர் அவ்வன் பதவன் என்று பொறிக்கப்பட்டு உள்ளது.

Gasiyo Eskikatir - தமிழில் காத்தய்ய இசக்கி கதிர் > காத்தய்யன் இசக்கி கதிர் என செப்பமாக படிக்கலாம். ககரம் கடுஒலி பெற்றுள்ளது. தகரம்சகர இன ஒலி ஸகரமாக தரிந்தது. காத்தவராயன் இன்றும் வழங்கும் பெயர். இசக்கியம்மன், இசக்கிமுத்து ஆகிய பெயர்கள் தமிழகத்தில் வழங்குகின்றன. பாபிலோன் மன்னன் ஒருவன் பெயர் Ishki bal 1732 BC - தமிழில் இசக்கி பால் > இயக்கி வால் என செப்பமாக படிக்கலாம். வால் - ஒளிரும் வெண்மை எனப் பொருள், வ>ப திரிபால் பால் என வழங்கும். பால் - வெண்மைப் கருத்து வேர். கதிர்- கதிரேசன் என தமிழகத்தில் வழங்குகிறது. ஈலம் நாகரிகத்தல் ஒரு மன்னன் பெயர் Kutir Nahhunte 1740 BC - தமிழில் கதிர் நக்கந்தி > கதிர் நக்கன் கந்தி என செப்பமாக படிக்கலாம். நக்கன் சிந்து முத்திரைப் பெயர். கந்தன் > கந்தி ஆகும்.

Tomadyan Piyankhi III 671 - 659 BC - தமிழில் தாம் அதியன் பய்யங்கி > தாமன் அதியன் வய்யங்கி என செப்பமாக படிக்கலாம். அதியன் சேரக் கிளை மரபினரான அதியமான்கள் குடிப்பெயர். Elalion Taake 402 -392 BC - தமிழில் எல்லாளியன் தக்கி என்பது செப்பமான வடிவம். எல்லாளன் என்ற தமிழ் மன்னன் ஈழத்தை மிக சிறப்பாக ஆண்டவன். சீனத்தின் Tiefu பழங்குடி வேள் பெயர் Liu Eloulou 356 -358 BC தமிழில் ஒளிய எல்லாள > ஒளியன் எல்லாளன் என செப்பமாக படிக்கலாம். ஒளியன் சிந்து முத்திரைப் பெயர். திரை நகர போனீசிய மன்னன் பெயர் Elulaios 729- 694 BC - தமிழில் எல்லளைய > எல்லாளியன் என செப்பமாக படிக்கலாம். தக்கை - தக்கி, தக்கு, தக்கன் என்றும் வழங்கும். கோவை சூலூரில் கட்டிய சிந்து எழுத்து பொறித்த மட்கலனில் தக்க இன்னன் என பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. சப்பானிய வேந்தரின் ஈமப் பெயர் Taka Kura 1168 - 1180 AD - தக்க குர > தக்கன் குரவன் என செப்பமாக படிக்கலாம்.

Atserk Amen III 382 BC - தமிழில் ஆட் செருக் ஆமன் > ஆடு செருக்கு ஆமன் என செப்பமாக படிக்கலாம். ஆடு - வெற்றி, செருக்கு -- பெருமிதம். ஆடு செருக்கு ஆமன் எனறால் வெற்றிச் செருக்கள்ள ஆமன் என பொருள். இது கடல் பிறகோட்டிய செங்குட்டுவன், சித்திர மாடத்து துஞ்சிய பாண்டியன் என்பது போல வினைச் சிறப்பு சுட்டிய பெயர். Kolas 295 - 285 BC - தமிழில் காள > காளன்என செப்பமாக படிக்கலாம். இது சிந்துவெளி முத்திரையில் காணப்படும் பெயர். தமிழகத்தில் இன்றும் வழங்குகிறது. காளி இதன் பெண் பால் பெயர். நடு ஆப்பிரிக்காவில் ஒரு மன்னன் பெயர் அலி காளன் என்பது.

Stiyo 269 - 255 BC - தமிழில் திய்ய > திய்யன் என செப்பமாக படிக்கலாம். தேனி வட்டம் புலிமான்கோம்பை என்ற ஊரில் பேடு திய்யன் அந்தவன் என்ற பெயர் பொறித்த பிராமி நடுகல் கண்டெடுக்கப்பட்டது. திய்யன் என்ற கேரள சாதிப் பெயர் மிக பின்னர் ஏற்பட்டது. கொரிய நாகரிகத்தில் ஒரு மன்னன் பெயர் Deun gol 874 - 849 BC தமிழில் திய்யன் கோல் என செப்பமாக உள்ளது. தகர இனக் கடுஒலி பெற்றுள்ளது. கோல் - கோலப்பன் இன்றும் வழங்கும் பெயர்.

Bawawl 70 - 60 BC தமிழில் பவ்வல் > வவ்வல் என செப்பமாக படிக்கலாம். அன் ஈறு பெற்று வவ்வன் ஆகும். சீனத்தில் Xia அரசின் ஓர் அரசன் பெயர் Helian Bobo 407 - 425 AD - தமிழில் கிளியன் பப்ப > கிளியன் வவ்வன் என செப்பமாக படிக்கலாம். வகரம் பகர கடுஒலியாக திரிந்துள்ளது. இவன் மரபினர் எல்லாரும் கிளியன் பட்டம் தாங்கியுள்ளனர். சோழ மன்னர் சிலர் கிள்ளி எனப்பட்டனர். Barawas 60 - 50 BC - தமிழில் பரவன் என செப்பமாக படிக்கலாம். பகரம் கடுஒலி பெற்றுள்ளது. தமிழில் பரவன் மீனவரை குறிக்கும். கடல் பரவை எனப்படும்.

Serada 105 -121 AD தமிழில் சேர் ஆத > சேரன் ஆதன் என செப்பமாக படிக்கலாம். சேர மன்னர்களே ஆதன் என்ற பெயர் கொண்டிருந்தனர். காட்டாக, இமய வரம்பன் நெடுஞ் சேரல் ஆதன். Azegan Malbagad 200 - 207 AD - தமிழில் அழகன் மால் பகடு என செப்பமாக படிக்கலாம். மால் - கருமைக் கருத்து, பகடு - எருமை, ஆண் எருமையின் வலிமை ஒடு ஒப்பிட்டு இப்பெயரை சூட்டி இருக்கலாம்.
கிறித்தவ மதப் பரவலால் தமிழ்ப் பெயர்கள் ஒழிந்தன. ஆங்காங்கே கலப்பு பெயராக Tseyon / Tsion - திசையன் போன்ற பெயர்கள் வழக்கூன்றின. தமிழகம், சிந்துவெளி அல்லாத பிற நாகரிகங்களில் அகரம் ஒகரமாயும், வகரம் பகரமாயும், தகரம் சகரமாயும் திரிந்துள்ளன. அப்பெயர்களை தமிழாய் படிக்க மூல எழுத்தையே நாட வேண்டும். மேற்கு நாகரிக மன்னர் பெயர்களும், கிழகக்கு நாகரிக மன்னர் பெயர்களும் தமிழாய் இருப்பது இடைப்பட்ட சிந்து நாகரிகமும் தமிழர் நாகரிகமே என்பதை இது வரை மறுத்து வந்தவர்களை நம்பிக்கைப்படுத்த உதவும். எதியோபிய மன்னர் பெயர்கள் தமிழல்ல என மறுப்போர் சங்க இலக்கியஙகளில் கற்றத்துறைபோகிய தமிழ் அறிஞர்களை உசாவ வேண்டுகிறேன். அதோடு Indus Script Dravidian, 1995 என்ற நூலை மேற்கோளாக கொள்ளும்படி வேண்டுகறேன்.
மிகப் பலர் எண்ணுவது போல் மூலதாய் நாகரிகமான தமிழர் நாகரிகத்திற்கு ஆப்பிரிக்காவோ, சுமேரியாவோ, சிந்து வெளியோ அல்லது கிழக்கு நாகரிகங்களோ தாயகம் அல்ல. தமிழ் இலக்கியங்கள் தமிழர் தாயகத்தை தென்புலம் என்கின்றன. அயினும் அதற்கு தொல்லியல் சான்று ஏதும் இல்லை. இது தொடர்பாக தமிழ்நாடு தொல்லியல் துறை அடிக்கடல் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தள்ளது. நல்ல முடிவுகள் வரும் என எதிர் பாரக்கலாம். இப்பெயர் ஒப்பாய்வு ஒரு புதிய களமாக ஏற்கபட்டு விரிந்து பரவினால் தமிழ் நாகரிகத்தின் எல்லையும், காலமும் விரிந்து இருப்பதை நிறுவ இயலும்..

Wednesday, February 20, 2013

நோயை விரட்டும்யோக முத்திரைகள்


யோகாசனம் ஒரு அற்புதமான கலை. தினமும் யோகா செய்பவர்களுக்கு நோய் வருவது தடுக்கப்படுவதுடன் மனவலிமையும் அதிகரிக்கும். யோகாவில் ஒரு அம்சம் முத்திரைகள். கை விரல்களால் செய்வது முத்திரைகள்.

நம் உடலில் மறைந்திருக்கும் சக்தியை வெளிக் கொண்டு வருவதே முத்திரைகள். நரம்புகளுடன் சம்பந்தப்பட்ட உடல் உறுப்புகளை இந்த முத்திரைகள் மூலம் கட்டுப்படுத்தலாம். பிரபஞ்சம் பஞ்ச பூதங்களால் உண்டாக்கப்பட்டது. நம் உடலும் பஞ்ச பூதங்கள் அடங்கியதுதான். நம் கை விரல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பூதத்தை குறிப்பதாக உள்ளது.

கட்டை விரல் - நெருப்பையும், ஆள்காட்டி விரல் - காற்றையும், நடுவிரல் - வானத்தையும், மோதிர விரல் - நிலத்தையும், சிறு விரல் - நீரையும் குறிக்கின்றன. இந்த பஞ்ச பூதங்கள் சம நிலையில் இருக்கும்போது உடல் ஆரோக்கியமாக இருக்கிறது.

இந்த முத்திரைகளை உட்கார்ந்திருக்கும் போதோ, நிற்கும்போதோ, நடக்கும்போதோ செய்யலாம். வஜ்ராசனம், பத்மாசனத்தில் அமர்ந்து செய்வது அதிக நன்மை அளிக்கும். தினந்தோறும் 10 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

சின் முத்திரை அல்லது ஞான முத்திரை: கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் நுனிகள் இரண்டும் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்வது மனத்தை ஒருநிலைப்படுத்த உதவும். மூளை செல்கள் புத்துணர்ச்சி பெறும். தலைவலி, தூக்கமின்மை, கவலை, கோபம் ஆகியவை விலகும்.

வாயு முத்திரை: ஆள்காட்டி விரலைக் கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் சிறிது அழுத்தம் கொடுக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்தால் வாயு தொடர்பான நோய்கள் போகும். ரத்த ஓட்டம் சீராகும்.

சூன்ய முத்திரை: நடுவிரலை, கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால் காதில் நீர் வடிதல், காது வலி, காது அடைப்பு போன்றவை சீராகும். எலும்பு தளர்ச்சி மற்றும் இதய நோய் தவிர்க்கப்படும். தசைகள் வலுவடையும். தைராய்டு நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

பிருதிவி முத்திரை: பெருவிரல் மற்றும் மோதிர விரலின் நுனிப்பாகம் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் உடல் மற்றும் மூளை செல்கள் ஊக்கம் பெறும்.

சூரிய முத்திரை: மோதிர விரலை கட்டை விரலின் அடிப்பாகத்தில் வைத்து மெதுவாக அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நீங்கும். உடலின் வெப்பம் அதிகரித்து ஜீரண சக்தி பெருகும்.

வருண முத்திரை: சுண்டு விரலின் நுனியை கட்டை விரலின் நுனி தொட்டு கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால், தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். தோல் வறட்சி, முகப்பருக்கள் வராமல் தடுக்கப்படும்.

பிராண முத்திரை: மோதிர விரல், சுண்டு விரல் இரண்டையும் மடக்கி, கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இந்த முத்திரையால் கண் கோளாறுகள் நீங்கி ஒளி பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

அபான முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டையும் மடக்கி கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டிருக்கும்படி வைக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்தால் மலச்சிக்கல், மூல நோய், வாயுத் தொல்லை விலகும். உடலிலிருந்து தேவையற்ற கழிவுகள் வெளியேறும்.

அபான வாயு முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டும் கட்டை விரல் நுனியை தொட்டு கொண்டிருக்க வேண்டும். ஆள்காட்டி விரல் கட்டை விரலின் அடிப்பாகத்தை தொட்டு கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் இதய நோய் சரியாகும். ரத்த ஓட்டம் சீரடையும்.

லிங்க முத்திரை: இரண்டு கைகளையும் சேர்த்து பிடித்துக்கொண்டு இடது கட்டை விரலை மட்டும் நிமிர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும். உடலில் உள்ள அதிக சூட்டை சமன்படுத்தும். கபத்தை அகற்றும். ஜலதோஷம், ஆஸ்துமா பிரச்னைகள் விலகும். வறட்டு இருமல், நீர்க்கட்டு பிரச்னை சரியாகும்.

அஸ்வின் முத்திரை: பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து கொண்டு குதத்தை சுருக்கி விரிவடையச் செய்வதே அஸ்வினி முத்திரையாகும். இதை படுத்து கொண்டும் செய்யலாம். ஆரம்ப காலத்தில் 10 முதல் 20 முறையும், பிறகு 30 முதல் 50 முறையும் செய்யலாம்.

இந்த முத்திரையை செய்தால் நரம்பு மண்டலம் ஊக்குவிக்கப்படும். வாயுத் தொல்லை, மலச்சிக்கல், மூலநோய் ஆகியவை நீங்க வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு கருப்பை வலுப்பெறும். பிரசவ காலத்தில் இயல்பான குழந்தைப் பேறு கிடைக்கும்.

இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்:-



1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்!

2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.

3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.

4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.

5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.

6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.

7. கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.

8. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.

9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம்.

10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா‌ல் ‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம். கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம்.

11. காரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட‌ல் வ‌லிமை பெரும்.

12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.