Sunday, July 27, 2014

வடசொல் : தமிழ்ச் சொல்

ஐயா பசியாறிட்டீங்களா (சார் டிபன் ஆயிடிச்சா ? )
-----------------------------------------------------------------------------------
வடசொல் : தமிழ்ச் சொல்
--------------------------
சாதம் - சோறு
கிரமம் - ஒழுங்கு
கிராமம் - சிற்றூர்
சக்தி - ஆற்றல்
சகோதரன் - உடன்பிறந்தான்
சந்நிதி - திருமுன்(பு)
சபதம் - சூளுரை
சந்தோஷம் - மகிழ்ச்சி
ஜலதோஷம் - நீர்க்கோவை
சாபம் - கெடுமொழி
சிநேகம் - நட்பு
சுத்தம் - தூய்மை
சுபாவம் - இயல்பு
சேவை - தொண்டு
தாகம் - வேட்கை
நிபுணர் - வல்லுநர்
பகிரங்கம் - வெளிப்படை
பரிகாசம் - நகையாடல்
பந்தபாசம் - பிறவித்தளை
பிரசாரம் - பரப்புரை
மந்திரம் - மறைமொழி
மிருகம் - விலங்கு
முகூர்த்தம் - நல்வேளை
யுத்தம் - போர்
இரகசியம் - மறைபொருள்
வயது - அகவை
வாகனம் - ஊர்தி
வாதம் - சொற்போர்
விகிதம் - விழுக்காடு
விக்கிரகம் - திருமேனி அல்லது செப்புச் சிலை
வேதம் - மறை
வேகம் - விரைவு
ஜாதகம் - பிறப்புக் கணக்கு
ஜெபம் - தொழுகை
ஜென்மம் - பிறவி
ஜோதிடன் - கணியன்
ஸ்தாபனம் - நிறுவனம்
ஷேத்ரம் - திருத்தலம்
யாகம் - வேள்வி
போகம் - நுகர்வு
மோகம் - விருப்பு

Wednesday, July 23, 2014

சிறப்பு வாய்ந்த சிவாலயங்கள்


சிறப்பு வாய்ந்த சிவாலயங்கள் ஒரு பார்வை

.
சிவாயநம.
பெரியகோயில் என்று சொல்வதற்குக் காரணம்
1. பெரிய நிலப்பரப்பு
2. வானளாவிய கோபுரங்கள்
3. பெரிய திருச்சுற்றுக்கள்
4. பெரிய மதில்கள்
5. பெரிய திருக்குளங்கள்
6. உயர்ந்த பெரிய வாயில்கள்
7. உட்கோயில்களும் பெரிய அமைப்பினை உடையன
8. பெரிய திருஉருவங்கள்
9. பெரிய வாகனங்கள்
10. பெரிய திருவிழாக்கள்

பெரிய சிவன் கோயில்கள்
1. தில்லைத் திருக்கோயில்
2. மதுரை சுந்தரேசுவரர் கோயில்
3. திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்
4. இராமேசுவரம் இராமநாதர் கோயில்
5. திருவானைக்கா ஜம்புகேசுவர்ர் கோயில்
6. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்
7. கும்பகோணம் கும்பேசுவரர் கோயில்
8. தஞ்சை பிரகதீசுவரர் கோயில்
9. சீர்காழி பிரமபுரீசுவரர் கோயில்
10. திருவையாறு ஐயாறப்பர் கோயில்
11. திருவாரூர் வன்மீகநாதர் கோயில்
12. திருவிடைமருதூர் மகாலிங்கேசுவரர் கோயில்.

மதுரை ஆலயம்
இருபத்தைந்து மகேசுவர மூர்த்தங்களை ஒரு சேரக் காணக் கூடிய இடமாக மதுரை ஆலயம் மட்டுமே உள்ளது எனலாம். மதுரை சொக்கநாதர் திருமுன்புள்ள நந்தி மண்டபத்தைச் சுற்றிலும் உள்ள பெருந்தூண்களில் இவ்விருபத்தைந்து திருவுருவங்களும் அமைந்துள்ளன.

மலைக்கோவில்கள்
பொதுவாக மலைக்கோவில்கள் முருகனுக்கும் திருமாலுக்கும் தான் உண்டு. ஆனால் திருக்கழுக்குன்றம், திருச்செங்கோடு, திருக்காளத்தி, மகாதேவமலை ஆகியவைகள் எல்லாம் சிவபெருமானுக்குரிய கோவில்கள். விநாயகருக்குத் திருச்சி மலைக் கோட்டையில் உச்சிப்பிள்ளையார் எனும் திருநாமம் உண்டு.

விமானத்தில் அறுபத்து மூவர்
தஞ்சை மாவட்ட தாராசுரம் ஐராவதீசுவரர் கோயில் விமானத்தைச் சுற்றிலும் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றுப் பகுதிகள் சிற்பமாக அமைந்துள்ளன.

வைப்புக் கோயில்
தேவாரப் பதிகம் பெறாமல் தேவாரம் பாடிய எவராலும் பதிகம் பாடிப் போற்றப் பெறாமல் தேவாரப் பாசுரங்களில் பாட்டுக்களின் பெயர் மட்டுமே குறிக்கப் பெற்ற தலங்கள் ஆகும். வைப்புத் தலக்கோயில்கள் 280 உள்ளன.

பாடல் பெற்ற கோயில்கள்
அப்பர் சம்பந்தர், சுந்தரர் தனித்தோ இணைந்தோ பதிகம் பாடிய கோயில்கள் பாடல் பெற்ற கோயில்கள் இவை தேவாரம் பெற்ற கோயில்கள் என்பர். இவற்றின் எண்ணிக்கை 247. திருப்புகழ் பாடல் பெற்ற திருக்கோயில்கள் 106.

கோயில்
இந்தியாவிலேயே கோயில்கள் தமிழ்நாட்டில்தான் மிகுதி மொத்தக் கோயில்கள் 24,605 (சிவனுக்கு 10,033 பெருமாளுக்கு 4,226, இதர 10.346.

கொடி மரம், நந்தி, பலி பீடம் இல்லை
திருப் பெருந்துறை ஆவுடையார் கோயிலில் ஏனைய சிவாயங்களைப் போல் கொடிமரம், நந்தி, பலி பீடம் இல்லை, இதற்குரிய காரணம் இது. யோகசித்தியால் அகங்கார மகாரங்கள் பலியாகி, பசுபோதமும் விலகியபக்குவ ஆன் மாக்கள் முத்திபேறு பெறுவதற்கான அத்வைதத் தலம் திருப்பெருந்துறை.

சிற்பிகள் உறுதி மொழி
கோயில் திருப்பணி செய்யும் சிற்பாசாரி யர்கள் வேலை ஒப்பந்தம் செய்யும் போது ஆவுடையார் கோயில் சிற்ப வேலைகள் புற நீங்கலாக எனக் குறிப்பிடுவர். ஏனெனில் திருப்பெருந்துறை ஆவுடையார் கோயில் சிற்பங்களுக்கு நிகராக வேறு எங்கும் இல்லை.

லிங்கத்தின் பின்னால் சிவன்
திருவீழிமிழலையில் நேத்திரார்ப்பணேசுவர சுவாமி லிங்கத் திருமேனியின் பின்னால் பார்வதி பரமேச்வர்ர் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்கள். சாதாரணமாக சிவாலயக் கருவறையில் காணமுடியாத சிறப்பு இது.

மரகதலிங்கம்
திருநாள்ளாறு திருத்தலத்தில் தியாகராசப் பெருமாள் சன்னதியில் சாதிபச்சை இரத்தினத்திலான சிவலிங்கம் உள்ளது. பாதுகாப்பு பெட்டகத்தில் உள்ள இதற்கு ஐந்து கால அபிடேக ஆராதனை நடைபெறகிறது.

நடராசர் அபிடேகங்கள்
சித்திரை திருவோணம் உச்சிக்காலம் முற்பகல் 10 மணிக்கு மேல் பிற்பகல் 2 மணிக்குள், ஆனி உத்திரம் பிரதோசக் காலம் மாலை 4,30 இரவு 7க்குள்,
ஆவணி வளர்பிறை மாலைச்சந்தி மாலை 6 முதல் இரவு 8க்குள் சதுர்த்தசி புரட்டாசி வளர்பிறை அர்த்தயாமம் இரவு 9.30 முதல் 11 க்குள் சதுர்த்தசிமார்கழி திருவாதிரை உசத்காலம் அதிகாலை 3,00 க்கு மேல் 6,00க்குள். மாசி வளர்பிறை காலை சந்தி காலை 6,00 முதல் 9,00க்குள்
சதுர்த்தசி பகல் அபிடேகங்களுக்கு மாலையும், இரவு அபிடேகங்களுக்கு மறுநாள் உதயமும் தரிசன காலமாகும். தில்லையில் நடராசரே மூலவரும் உற்சவருமாவார்.

மரகத நடராச வடிவம்
திருஉத்தரகோச மங்கை நடராசர் மரகதத்தாலாய திருமேனி, எனவே எப்போதும் சந்தனக்காப்புக்குள் மறைந்திருப்பார் திருவாதிரை ஒருநாளில் மட்டும் சந்தனக்காப்பு மாற்றிப் புதுச் சந்தனக்காப்பு சாத்தப் பெறும்.

ஆண்பெண்ணாக உலா
திருவானைக்காவில் பங்குனி மாதம் நடைபெறும் பஞ்சப்பிரகார திருவிழாவில் இறைவன் பெண் வேடத்திலும் இறைவி ஆண்வேடத்திலும் திருவீதி உலா வருகிறார்கள்.

தமிழகத்தில் முதல் நடராசர் சிற்பம்
தமிழகத்தில் பல்லவர்காலத்தில் சீயமங்கலத்தில் உள்ள குகைக் கோயில் தூணில் உள்ள சிற்பம் ஆடல் தாண்டவச் சிற்பத்தின் முன்னோடி என்பர். காஞ்சிகைலாச நாதர் கோயிலில் ஊர்த்துவ தாண்டவர் சிற்பம் உள்ளது. சங்கர தாண்டவர் சிற்பம் ஒன்றும் கருவறைக்கு வெளியே உள்ளது.

தட்சிணாமூர்த்தி
எல்லாச் சிவன் கோவில்களிலும் மூலவருடைய கருவறைக்கு வெளியே தென்பக்கத்தில் தட்சிணா மூர்த்தியைக் காணலாம். ஆனால் காஞ்சி ஏகாம்பரேசுவரர் கோவிலில் மட்டும் தட்சிணாமூர்த்தி இல்லை காஞ்சிக்குப் பத்துக் கல் தொலைவில் சிறிய ஊரில் இக்கோயிலுக்குரிய தட்சிணாமூர்த்தி தனிக்கோவில் கொண்டுள்ளார்.

சிவன் மானுட வடிவங்கள்

அடியவர்கட்கு அருள்புரிந்து ஆட்கொள்ளச் சிவன் வேண்டி மானுடச் சட்டை தாங்கி மேற்கொண்ட மானுட வடிவங்களைச் சேக்கிழாரும் பரஞ்சோதியாரும் சித்தரித்துக் காட்டியுள்ளனர்.
பெரிய புராணம் காட்டும் வடிவங்கள் -- 15
பெரிய புராணத்துள் சிவபெருமான் சுந்தரருக்காக மேற்கொண்ட மானுட வடிவங்கள் ஆறாகும். அவையவான
1. தடுத்தாட் கொள்ள வந்த முதிய அந்தணர் வடிவம்
2. திருவதிகையில் திருவடி சூட்ட மேற்கொண்ட முதிய அந்தணர் வடிவம்.
3. திருக்கூடலையாற்றூருக்கு அழைத்துச் சென்ற வேதியர் கோலம்.
4. திருக்குருகாவூரில் தண்ணீரும் பொதிசோறும் அளிக்க வந்த மறைவேதியர் கோலம்.
5. திருக்கச்சூரில் உணவு இரந்து கொடுக்க அந்தணர் கோலம் 6. பரவையார் ஊடலைத் தவிர்க்க மேற்கொண்ட ஆதிசைவர் வடிவம்‘
அதுபோலத் திருநாவுக்கரசருக்காகச் சிவன் மேற்கொண்ட மானுட வடிவங்கள் இரண்டு.
1. திருப்பைஞ்ஞீலியில் பொதிசோறளிக்க மேற்கொண்ட அந்தணர் வடிவம்.
2. பனிபடர்ந்து இமயமலையின்கண் அப்பருக்கருள மேற்கொண்ட மாமுனி வடிவம்.
இவற்றைத் தவிர ஏனைய ஏழு மானுட வடிவங்கள் ஏழு நாயன் மார்கட்காக மேற்கொள்ளப் பெற்றவையாகும்.
1. திருநீலகண்ட நாயனாருக்கருள மேற்கொண்ட சிவ யோகியார் வடிவம்.
2. இயற்பகை நாயனாரைச் சோதிக்க மேற்கொண்ட தூர்த்த வேடம்
3. இளையான்குடிமாறநாயனாரை உய்விக்க வந்த அடியார் வேடம்
4. அமர்நீதி நாயனாரை மேற்கொள்ள வந்த பிரமச்சாரி வடிவம்.
5. மானக்கஞ்சாற நாயனாருக்காக மேற்கொண்ட மாவிரதியார் வடிவம்.
6. திருக்குறிப்புத் தொண்ட நாயனாருக்காகக் கொண்ட அருந்தவ வேடம்.
7. சிறுத்தொண்ட நாயனாருக்காக மேற்கொண்ட பயிரவ வேடம்.

திருவிளையாடற் புராண மானுட வடிவங்கள் -- 24
திருவிளையாடற் புராணத்துள் சிவன் மேற்கொண்ட இருபத்து நான்கு மானிட வடிவங்களைப் பரஞ்சோதியார் சுட்டிக்காட்டியுள்ளார். அவற்றுள்
வேட வடிவம் நான்கு
புலவர் வடிவம் நான்கு
சித்தர் வேடம் மூன்று
குரு வேடம் மூன்று
வாணியச்செட்டி வேடம் மூன்று
குதிரைச் சேவகன் வேடம் இரண்டு
ஏனையவை ஒன்று ஒன்று ஆகும்.

புலவர் வேடம் நான்கு
1. புலவர் வடிவாகி இசைவாதில் தீர்ப்பு கூறுதல்
2. புலவராகிப் புலவர்களை அழைத்துச் செல்லுதல்
3. புலவராகி உருத்திர சன்மன் பிறப்பு பற்றிக் கூறுதல்
4. புலவராகி புலவர் தருமிக்குப் பாடல் அருளுதல்

வேடுவ வேடம் நான்கு
1. வேட்டுவ வடிவில் வீரனாக யானையை எய்தமை
2. வேடன் வேட்டுவச்சியாக மாபாதகம் தீர்த்தமை
3. வேட வடிவு கொண்டு வேலாயித்த்துடன் சோழனை வென்றமை
4. வேட வடிவொடு சுந்தரப் பேரம்பெய்திமை

சித்தர் வேடம் மூன்று
1. எல்லாம் வல்ல சித்த வடிவம் கொண்டமை
2. சித்தர் வேடம் கொண்டு வைகையை வற்றச் செய்தமை
3. சித்தர் வேடத்துடன் பொன்னனையாள் இல்லம் சென்றமை

குரு/ ஆச்சார்ய வேடம் மூன்று
1. பதினாறு வயது அந்தணராகக் கண்ணுவர் அரதத்தருக்கு வேதப் பொருளை அருளியமை
2. ஆச்சார்ய வேடம் கொண்ட இயக்கிமாருக்கு அருளல்
3. ஞானாசிரியர் வடிவு கொண்டு மணிவாசகருக்கு அருளல்

வாணிக வடிவம் மூன்று
1. வைசியர் வேடம் கொண்டு மாணிக்கம் விற்றமை
2. வளையல் விற்கும் வணிகராக வளையல் விற்றமை
3. தளபதி செட்டியராக மாமனாகி வழக்குரத்தமை

குதிரைச் சேவக வடிவம் இரண்டு
1. குதிரைச் சேவகனாகி மெய்க்காட்டிட்டமை
2. மணிவாசகருக்காகச் குதிரைச் சேவகனாகி நரி பரியாக்கியமை

ஏனைய வடிவங்கள்
1. வாள் ஆசிரியராக அங்கம் வெட்டியமை
2. தவசியாகத் தண்ணீர்ப் பந்தல் வைத்தமை
3. விறகு வெட்டியாக விறக விற்றமை
4. வலைஞராகி மீன்வலை வீசியமை
5. மண் சுமக்கும் கூலியாளாய் மண் சுமந்தமை

பன்றி வடிவம்
இம்மானுட வடிவங்களைத் தவிர பன்றிக் குட்டிகளின் துயர் நீக்க இறைவன் தாய்ப்பன்றி வடிவேற்றுப் பாலளித்த வடிவமும் பரஞ்சோதியாரால் குறிப்பிடப் பெற்றுள்ளது.

சிவன் விடங்க வடிவம்
உளியால் செதுக்கப் பெறாமல் தானே உண்டாகும் சுயம்பு வடிவம் விடங்க வடிவம் எனப்பெறும். சிவபெருமான் விடங்க வடிவங்கள் காணப்பெறும் தேவாரத் திருத்தலங்களான திருவாரூர், திருநாகைக்காரோணம், திருக்காறாயில், திருக்கோளிலி, திருவாய்மூர், திருமறைக்காடு, திருநள்ளாறு ஆகியவற்றைச் சப்தவிடங்கத் தலங்கள் என்று கூறுவர். இவற்றுள் திருவாரூர் நாகை இரண்டை மட்டும் விடங்கத் தலங்களாகக் குறிப்பிட்டுள்ள தேவார ஆசிரியர்கள் கூடுதலான விடங்கத் தலங்களாகத் திருப்பைஞ்ஞீலி, திருவெண்காடு, திருக்கயிலை, திருக்கலயநல்லூர் ஆகிய தலங்களைக் குறிப்பிட்டுள்ளனர்.

சிவன் விகிர்த வடிவம்
ஒன்றுக் கொன்று எதிர்மறையாய் முரண்பட்டு வேறாயும் உடனாயும் நிற்கும் சிவ வடிவம் விகிர்த வடிவம் எனப்பெறும். வேறும் உடனுமாம் விகிர்தர் அவர் என்பார் ஞானசம்பந்தர். காலத்தால் அழியாத காலத்தைக் கடந்த அனைத்துமான சிவன் பேரியல்புகளை விளக்குவன இவ்விகிர்த வடிவங்களாகும்.

ஒருவன் பலவுருவன் 1--13--2,
ஆனொடு பெண் அலியல்லர் ஆனார் 6--73--3,
உருவிரண்டும் ஒன்றோடொன்று ஒவ்வா அடி 6--6--6
அந்தமும் ஆதியும் 1--39--1
இல்லான் உள்ளான் 6--11--3
நுண்ணியர் மிகப் பெரியர் 1--61--6
அகத்தினர் புறத்தினர் 3--83--8
என்பன போன்ற தேவாரத் தொடர்கள் சிவன் விகிர்த வடிவினை விளக்குவனவாகும்.

சிவபெருமான் ஓவியங்கள்
சிவபெருமான் நடமாடும் பஞ்சசபைகளில் ஒன்றாகத் திருக்குற்றாலம் சித்திரசபை குறிப்பிடப்படுகின்றது.

தில்லைத் திருமூலநாதர் கோயில் ஓவியங்கள்
சிவபெருமானுடைய இருபத்தைந்து மகேஸ்வர வடிவ ஓவியங்கள் தில்லைப் பெருங்கோயிலில் திருமூலட்டானர் சன்னதியின் வெளிச்சுற்றுச் சுவரில் அழகிய வண்ண ஓவியங்களாக இடம் பெற்றுள்ளன.

திருப்புடைமருதூர்க் கோயில் ஓவியங்கள்
ஐந்து நிலைக் கோபுரத்தினை உடையது இக்கோயில். முதலாவது அடுக்கில் திருஞானசம்பந்தர் புரிந்த திருவிளையாடல்களும், இரண்டாவது அடுக்கில் நடராசர் வடிவமும், மூன்றாவது அடுக்கில் மீனாட்சி சுந்தரேசர் திருமணக் காட்சியும், நான்காவது அடுக்கில் கந்தபுராணக் காட்சிகளும், ஐந்தவாது அடுக்கில் காளியின் நடனமும் அர்த்த நாரீஸ்வரக் கோலமும் ஓவியங்களாக இடம் பெற்றுள்ளன.
மதுரைத் திருகோயில் ஓவியங்கள்
முதுரை மீனாட்சி சுந்தரேசர் கோயிலில் பொற்றாமரைக் குளத்தின் வடக்குப் புறச்சுவரில் அறுபத்து நான்கு திருவிளையாடல்களைக் குறிக்கும் ஓவியங்கள் காணப்பெறுகின்றன.

காஞ்சி கைலாச நாதர் ஓவியங்கள்
இராச்சிம்மப் பல்லவன் காலத்தியதாகக் கருதப்பெறும் காஞ்சி கைலாச நாதர் கோயில் ஓவியங்கள் சிதைவு பெற்றிருப்பினும், இங்கு காணப்பெறும் சோமஸ்கந்தர் வரை கோட்டு ஓவியம் குறிப்பிடத்தக்கதாகும்.

பனைமலை சிவன் கோயில் ஓவியங்கள்
தென்னாற்காடு மாவட்டம் பனைமலை சிவன் கோயிலின் உட்புறச் சுவரில் நடராசர் வடிவமும சிவகாமியம்மையின் வடிவமும் சிறந்த ஓவியங்களாகக் காணப்பெறுகின்றன.

சீர்காழிக் கோயில் சிவன் ஓவியங்கள்
திருஞானசம்பந்தர் திருஅவதாரம் செய்த சீர்காழிக்குப் பன்னிரு பெயர்கள் உண்டு. அப்பன்னிரு பெயர்களுக்குரிய புராண நிகழ்ச்சிகள் இக்கோயிலில் உள்ள சம்பந்தர் கோயில் உட்சுவரின் வலப்பக்கத்தில் ஓவியங்களாகச் சித்தரிக்கப் பெற்றுள்ளன. அவ்வோவியங்களாவன.
1. பிரமபுரம் -- படைப்புக் கடவுளான பிரமதேவன் வழிபட்டமை
2. வேணுபுரம் -- அறைவன் மூங்கில் வடிவில் தோன்றி அருளியமை.
3. புகலி -- அசுர்ர்களால் அல்லலுற்ற தேவர்கட்குப் புகலிடமானவை.
4. வெங்குரு -- தேவகுருவான வியாழன் வழிபட்டமை.
5. தோணிபுரம் -- பிரளய காலத்தில் ஈசன் தோணியின் மீதமர்ந்து தோணியப்பராய்க் காட்சி தந்தமை.
6. பூந்தராய் -- பூமியைப் பிளந்த இரண்யாக்கதனை வதைத்த திருமாலின் வராகவதார வடிவம் சிவனைப் பூசித்தமை.
7. சிரபுரம் -- நவக்கிரகங்களில் ஒன்றான இராகுக் கிரகம் சிவனைப் பூசித்தமை.
8. புறவம் -- புறாவடிவில் வந்த அக்னி தேவனால் சிபிச்சக்கரவர்த்தி இத்தலத்தில் முத்தி பெற்றமை.
9. சண்பை -- சண்பை என்னும் கோரைப்புல்லால் மடிந்த தன் குலத்தினரால் தனக்கு நேர்ந்த பழியானது பற்றாமல் இருக்க்க் கண்ணன் வழிபட்டமை.
10. காழி -- காளி வழிபட்டமை.
11. கொச்சைவயம் -- மச்சகந்தியை விரும்பிய பழிச்சொல் நீங்கப் பராசரர் வழிபட்டமை.
12. கழுமலம் -- மும்மலங்கள் விலகும் வண்ணம் உரோமச முனிவர் வழிபட்டமை.

தஞ்சைப் பெரிய கோயில் ஓவியங்கள்
தஞ்சைப் பெரிய கோயில் கருவறையின் மேற்புற உட்சுவர்களில் தாருகாவனக் காட்சியும், எட்டுக்கைகளையுடைய பைரவர் கோலமும், நாய் வாகனமும் வரையப் பெற்றுள்ளன. தட்சணாமூர்த்தி ஓவியம். சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமாளுடன் கயிலைக்குச் செல்லும் காட்சி, முப்புரம் எரித்த கடவுள் வடிவம், இராவணன் கயிலையை எடுக்கும் காட்சி ஆகியன சிறப்பான ஓவியங்களாக இங்கு இடம் பெற்றுள்ளன.
திருவண்ணாமலை எழுத்து மண்டப ஓவியங்கள்
திருவண்ணாமலை மலைப்பாதையில் காணப்பெறும் கிருஷ்ண தேவராயன் மண்டவத்தில் காணப்பெறும் நான்கு புராண ஓவியங்களில் சிவன் உமை திருமணக் காட்சி ஒவியம் இடம் பெற்றுள்ளது. மற்றொன்றில் முருகன் வள்ளி திருமணக் காட்சி இடம் பெற்றுள்ளது.

திருவாரூர் ஓவியங்கள்
திருவாரூர்க் கோயில் தேவாசிரிய மண்டபத்தில் முசுகுந்த மன்னன்
தியாகராசர் திருவுருவைப் பெற்றுக் கொள்ளும் ஓவியம் காணப்பெறுகின்றது.
இவை தவிரத் தற்காலக் கோயில் திருப்பணியாளர்கள் தற்காலத்தைய புதிய வண்ணங்களைக் கொண்டு பல அழகிய ஓவியங்களைத் தற்போது வரைந்துள்ளமை கண்டு மகிழத் தக்கதாகும்

Thursday, July 17, 2014

'பஞ்ச பத்ர பாத்திரம்' (பஞ்ச பாத்திரம்)



இல்லங்களில் பூஜையின்பொது ' பஞ்ச பாத்திரம் ' என்ற பாத்திரத்தை பயன்படுத்துவதைப் பார்த்திருப்போம். அதன் இயற் பெயர் 'பஞ்ச பத்ர பாத்திரம்' என்பதாகும். அதாவது , ஐவகை பத்திரங்களை(இலைகள்) நீரில் இட்டு, அந்நீரை குறிப்பிட்ட ஒரு பாத்திரத்தில் விட்டு, உத்திரிணி என்ற சிறு கரண்டியால் நீரை எடுத்து பூஜைக்குப் பயன்படுத்துவதால் அப்பெயர்.
.
~ துளசி, ~ அருகு, ~ வேம்பு, ~ வில்வம், ~ வன்னி
ஆகிய இலைகளே பஞ்ச பத்திரங்கள். இந்த பத்திரங்களும் நீரும் விடப்படும் பாத்திரம் 'பஞ்ச பத்ர பாத்திரம்'. இதுவே காலப்போக்கில் மருவி பஞ்ச பாத்திரம் என்றானது. இந்த மூலிகைகள், தெய்வீகமானவை; பூஜைக்கு சிறந்தவை. சிறந்த மருத்துவ சக்திகளை கொண்ட இந்த மூலிகைகள், தெய்வீகமானவை; பூஜைக்கு சிறந்தவை. இந்த ஐந்து இலைகளையும் இறைவனுக்கு அர்ப்பணித்து தீர்த்தம் விடுவதாலேயே அந்த பாத்திரம் பஞ்ச பத்ர பாத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

~ சிவபெருமானுக்கு உகந்த இலை வில்வம்,
~ திருமாலுக்கு உகந்தது துளசி,
~ அம்மனுக்கு வேப்பிலை,
~ விநாயகருக்கு அருகம் புல்,
~ பிரம்மனுக்கு அத்தி இலை சிறப்பானது.

Tuesday, July 15, 2014

ஆன்மீக தகவல்கள்


ருத்ராட்சம் அணிவது பற்றி சிவபுராணம் .........
பஞ்சாட்சர மந்திரங்களை உச்சரித்தல்,திருநீறு தரித்தல்,ருத்ராடம் அணிதல் இம்மூன்றையும் ஒருவன் ஒருசேர செய்வது: திரிவேணி சங்கமத்தில் நீராடுவதன் புண்ணியத்தைப் பெற்றுத்தரும்.
ருத்ராட்சங்களை எண்ணற்ற அளவில் உடலில் தரித்துக் கொள்பவன்,மகேசனைப் போல அனைத்துத் தேவர்களாலும் தலை தாழ்ந்து வணங்கப்படுகிறான்.
...
ஒருவன் எவ்வகைப் பிறவி எடுத்திருந்தாலும் சரி, அவன் ருத்ராட்சத்தை அணிவானாகில்,நரகங்களிலிருந்து விடுபடுகிறான்.
எவ்வகை வர்ணத்தை(ஜாதியை)ச் சேர்ந்தவனாக இருந்தாலும் சரி;எவ்வகை ஆசாரத்தைக் கடைபிடிப்பவராயினும் சரி; பெண்களாயினும் சரி; அவர்கள் ‘ஓம் நமசிவாய’ என்னும் மந்திரத்தை உச்சரித்து,ருத்ராட்சங்களை அணிந்து கொள்ளலாம்.

ருத்ராட்சத்தை ஒருவன்/ள் ஒரு பகலில் அணிந்திருப்பானாயின், அவன் இரவில் செய்த பாவங்களை அது எரித்துவிடும்.இரவில் அணிந்திருப்பானாகில் அது அவன் பகலில் செய்த பாவங்களை எரித்துவிடுகிறது.ஆதலால் ஒருவன் எந்நேரமும் ருத்ராட்சங்களை அணிந்து கொண்டிருக்க வேண்டும்.
ருத்ராட்சமும் திருநீறும் அணிந்தவன் ஒருபோதும் யமலோகம் செல்வதில்லை;
ருத்ராட்சம் அணிந்து ஒருமுறை எவ்வித மந்திரம் கூறினாலும்,அதை 1,00,00,000 முறை உச்சரித்த பலனைத் தரும்.
ருத்ராட்சம் அணிந்து ம்ருத்யுஞ்ச மந்திரம் உச்சரிப்பவன் எல்லாவித நோய்களிலிருந்தும் விடுபடுகிறான்.அவனை அகால மரணமோ,துர்மரணமோ நெருங்குவதில்லை.